புதுடெல்லி,
அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதியாக உள்ள யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு, டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக இருந்தார். அப்போது, கடந்த மார்ச் 14-ந் தேதி இரவு, டெல்லியில் உள்ள அவரது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. பழைய பொருட்கள் வைக்கும் ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில் கோடிக்கணக்கான ரூபாய் பணம் சிக்கியது.
இதுபற்றி விசாரிக்க 3 நீதிபதிகள் அடங்கிய விசாரணை குழுவை சுப்ரீம் கோர்ட்டு நியமித்தது. அக்குழுவின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பணம் கைப்பற்றப்பட்ட அறை, நீதிபதி யஷ்வந்த் வர்மா மற்றும் அவருடைய குடும்பத்தினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பாதி எரிந்த ரூபாய் நோட்டுகள், மறுநாள் அதிகாலையில் அகற்றப்பட்டுள்ளன. கிடைத்துள்ள நேரடி மற்றும் மின்னணு ஆதாரங்கள் அடிப்படையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் தவறான நடத்தையும், குற்றச்சாட்டுகளும் நிரூபணம் ஆகியுள்ளது. அவரை பதவி நீக்கம் செய்வதற்கு இவை போதுமானவை.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.