பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம் மற்றும் சார்கோட் விமானப்படை தளங்களை இந்தியா தாக்கியபின், போர் நிறுத்தத்துக்கு நாங்கள் அழைப்பு விடுத்தோம் என பாகிஸ்தான் துணை பிரதமர் இஷாக் தர் ஒப்புக் கொண்டுள்ளார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப்பின் பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு முதலில் முன்வந்ததால், அதற்கு இந்தியா சம்மதித்தது. ஆனால் இதை வெளிப்படையாக ஏற்காமல், பாகிஸ்தான் தொடர்ந்து மறுத்து வந்தது.
இந்நிலையில் பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் கூறியதாவது: பாகிஸ்தானின் ராவல் பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளம், சார்கோட் விமானப்படை தளம் ஆகியவற்றின மீது இந்திய விமானப்படை கடந்த மே 6-ம் தேதி நள்ளிரவு துல்லிய தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் நடத்த 45 நிமிடத்துக்குள், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன், என் சார்பில் பேசி போரை நிறுத்த சவுதி இளவரசர் ஃபைசல் முன்வந்தார். இவ்வாறு இஷாக் தர் கூறினார்.
இவரின் இந்த கருத்து, இந்தியாவின் தாக்குதலை நிறுத்த பாகிஸ்தான் மற்ற நாடுகளின் உதவியை நாடியது என்பது தெளிவாக தெரிகிறது.