புதுடெல்லி: இன்று ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, உ.பி.யின் அனைத்து அரசு அலுவலகங்களிலும் ‘ஒய்-பிரேக்’ எனும் பெயரில் அனைவருக்கும் யோகா செய்வதற்கான நேரம் ஒதுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து உ.பி. அரசு வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: யோகா நெறிமுறையை அனைத்து அரசு அலுவலகங்களிலும் செயல்படுத்த வேண்டும். இந்த முயற்சி இந்தியாவின் யோகா பாரம்பரியத்தை நிலைநிறுத்துவது மட்டுமல்லாமல், யோகாவை தினசரி வழக்கத்தின் ஒரு பகுதியாக மாற்றும். இதன் மூலம் மன அழுத்தமில்லாத, ஆரோக்கியமான பணிச்சூழலையும் ஊக்குவிக்கும்.
அரசு அலுவலகங்களில் யோகா நேரமானது அன்றாடம் 5 முதல் 10 நிமிடங்கள் வரை நீடிக்கும். அப்போது, கழுத்து, முதுகு மற்றும் இடுப்பு போன்றவற்றுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில் யோகா அமையும். ஆழ்ந்த சுவாசம் மற்றும் நினைவாற்றல் பயிற்சியும் இந்த ஒய்-பிரேக்கில் அடங்கும். இவ்வாறு அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
யோகாவை பரவலாக ஊக்குவிக்க, மத்திய அரசின் நமஸ்தே யோகா செயலி, ஒய்-பிரேக் செயலி, யோகா நாட்காட்டி மற்றும் யோகா சொற்களஞ்சியம் ஆகியவற்றை அதிகளவில் பயன்படுத்தவும் உ.பி. அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த செயலிகளை அரசு அலுவலகங்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் நடத்தப்பட உள்ளன.
4075 யோகா நிகழ்ச்சி: பிரதமர் மோடி அறிமுகம் செய்த யோகா தினத்தை முன்னிட்டு மாநில அரசும் யோகா கலாச்சாரத்தை வளர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த இலக்கை அடைய, பொது யோகா நெறிமுறை, பட்டறைகள் மற்றும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகளை நடத்தும் யோகா நிபுணர்களை சேர்க்கவும் உ.பி. அரசு திட்டமிட்டுள்ளது. இன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு உ.பி. முழுவதும் 4,075 இடங்களில் யோகா சிறப்பு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.