கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது தாக்குதல்: இந்து முன்னணிக்கு இடதுசாரிகள் கண்டனம்

திண்டுக்கலில் இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்திய சம்பவத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் (மார்க்சிஸ்ட்) அமைப்புகளும், உறுப்பினர்களும் கடந்த 11-ம் தேதி முதல் பத்து நாட்களாக , பாஜக மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் பரப்புரை இயக்கத்தை மேற்கொண்டனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில், ஒன்றியச் செயலாளர் ஆர்.சரத்குமார் தலைமையில் நடந்த பரப்புரை இயக்கத்தின் நிறைவாக, நேற்று (வெள்ளிக் கிழமை) மாலையில் தாடி கொம்பு பகுதியில் சரத்குமார் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்த இந்து முன்னணியை சேர்ந்த கும்பல், பேசுவதை நிறுத்தும் படி கூறி, சரத்குமார், பாக்கியம், சண்முகவேல் ஆகியோர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளது.

மதவெறி கும்பலின் வன்முறை தாக்குதலில் மாற்றுத் திறனாளிகள், பெண்களும் படுகாயமடைந்துள்ளனர். வன்முறை கும்பலின் குற்றச் செயல்கள் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுக்க சென்ற போது, அங்கும் வந்து அவர்களை தடுத்து தகராறு செய்துள்ளனர்.

இரா.முத்தரசன் | கோப்புப் படம்

படுகாயமடைந்த சரத்குமார், சண்முக வேலு இருவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்து முன்னணி கும்பல் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு, கும்பல் வன்முறை செயல்களில் ஈடுபட்டதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

இந்த வன்முறை நடவடிக்கை தொடருமானால், அதனை, எதிர்கொள்ள கம்யூனிஸ்டுகளும் களம் இறங்குவார்கள் என எச்சரிக்கிறோம். அரசியல் ஆதாயம் தேடி வடமாநிலங்களில் இதி காச நாயகன் ராமரை பயன்படுத்தியது போல, இங்கு, தமிழ்நாட்டில் “முருகனை” மையப்படுத்தி கலகங்களை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேடும் மலிவான செயலுக்கான அரசியல் சதியை, திண்டுக்கல் சம்பவம் வெளிப்படுத்தியுள்ளது.

இதனை ஆரம்ப நிலையிலேயே இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இல்லை என்றால், இது நாளுக்கு நாள் அதிகரிக்கும் பேராபத்தாகும். திண்டுக்கல் வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி கும்பலை சேர்ந்த அனைவரையும் கைது செய்து, கடுமையாக தண்டிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது. இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பெ. சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்: மக்கள் உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் ஒன்றியம், தாடிக்கொம்பில் போலீசாரிடம் அனுமதி பெற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது இந்து முன்னணியைச் சேர்ந்த வினோத் குமாரும் அவரது கூட்டாளிகளும் இடையூறு செய்ததுடன் ஒன்றியச் செயலாளர் சரத்குமார் உள்ளிட்டோரை கடுமையாக தாக்கியுள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரச்சாரத்தை பொறுத்துக் கொள்ள முடியாமல் இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் திட்டமிட்ட வன்முறையில் இறங்கி கோரத்தாண்டவம் ஆடியுள்ளனர். ஆனால், உண்மைகளை மறைத்து திசை திருப்பும் வகையில் இந்து முன்னணியின் மாநில செயலாளர் வி.எஸ்.செந்தில்குமார் என்பவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையில், நாடு முழுவதும் பயங்கரவாதத்தை நிகழ்த்தி மதவெறி வெறுப்பு அரசியலை வளர்த்து வருவது யார் என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

மேலும், அந்த அறிக்கையில் மத மற்றும் கடவுள் துவேசத்தை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பேசியதாக கூறியது கலப் படமற்ற அப்பட்டமான பொய்யாகும். அரசமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள வழிபாடு, நம்பிக்கை போன்றவற்றை அவரவர் உரிமையாக கருதுகிறோம். மதத்தில் அரசியல் கலப்பதையும், எளிய மக்களின் மத உணர்வுகளை தங்களின் குறுகிய அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்துவதையுமே எதிர்க்கிறோம்.

பெ. சண்முகம் | கோப்புப் படம்

இந்த பிரச்சார இயக்கத்தின் போது மத்திய பாஜக அரசின் விலைவாசி உயர்வு, வேலையின்மை, பொதுத் துறை தனியார்மயமாக்கம், கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை, ஜி.எஸ்.டி. வரி உயர்வு, பேரிடர் நிவாரண நிதி தர மறுப்பு உள்ளிட்டு தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் தொடர்ந்து இழைத்து வரும் துரோகங்கள், சிறுபான்மை மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் போன்ற பிரச்சனைகளையும், தமிழ்நாட்டில் மக்கள் ஒற்றுமையையும் – மத நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க இந்து முன்னணி மற்றும் பாஜக சங்பரிவார் அமைப்புகள் மேற்கொள்ளும் சதித் திட்டங்களுக்கு தமிழக மக்கள் இரையாகமாட்டார்கள் என்பதையுமே பேசியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் தாடிக்கொம்பிலும், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது கொடூரமான தாக்குதலை நடத்தியுள்ளனர். அதிலிருந்து தப்பிக்கவும், மக்களை திசை திருப்பவும் தங்களது வழக்கமான அவதூறு பொய் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.

வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி மற்றும் பாஜகவினர் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பிரச்சாரத்தில் ஈடுபட்டதற்காக வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரையும் எவ்வித நிபந்தனையுமின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசையும், காவல்துறையையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.” என்று பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.