Shubman Gill, England Vs India: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று (ஜூன் 20) தொடங்கியது. ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை 2025 (Anderson – Tendulkar Trophy 2025) தொடரில் இரு அணிகளுக்கும் இடையில் 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கின்றன.
England Vs India: கில், ஜெய்ஸ்வால் சதம்
லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் டாஸை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணி பேட்டிங் இறங்கிய நிலையில், முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 359 ரன்களை அடித்துள்ளது. சுப்மான் கில் 127 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 65 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஓபனரான கேஎல் ராகுல் 42 ரன்களில் பிரைடன் கார்ஸ் பந்துவீச்சில், ஜோ ரூட்டுடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து, வந்த சாய் சுதர்சனுக்கு அட்டாக்கிங் பீல்டிங்கை பென் ஸ்டோக்ஸ் அமைத்தார். இதனால் அழுத்தம் அதிகரிக்க லெக் ஸ்டம்பிற்கு வெளியே சென்ற பந்தை அடிக்கச் சென்று அறிமுகப் போட்டியிலேயே சாய் சுதர்சன் டக்அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு ஓபனரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடி 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்து பந்துவீச்சு தரப்பில் ஸ்டோக்ஸ் 2, கார்ஸ் 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
England Vs India: 4 கண்டங்களில் ஜெய்ஸ்வால் சதம்
இந்த போட்டியில் பல்வேறு சாதனைகளை ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பண்ட் ஆகியோர் செய்துள்ளனர். ஜெய்ஸ்வால் (Jaiswal) மேற்கு இந்திய தீவுகள், இந்தியா, ஆஸ்திரேலியாவை தொடர்ந்து நான்காவது நாடாக இங்கிலாந்திலும் சதம் அடித்துவிட்டார். நான்கு கண்டங்களில் அவர் சதம் அடித்திருக்கிறார்.
England Vs India: சுப்மான் கில் சாதனை
சுப்மான் கில் தான் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்திருக்கிறார். இந்த பெருமையை பெறும் 5வது வீரர் கில். சுப்மான் கில் (Shubman Gill) SENA நாடுகளில் அடிக்கும் முதல் சதமும் இதுதான். கில் மீது எக்கச்சக்க கேள்விகள், விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது பேட்டிங்கில் தனது தரத்தை நிரூபித்துள்ளார். கேப்டனாக இந்த தொடர் நிறைவுறும் போது ஒரு முடிவுக்கு வர முடியும். அப்படியிருக்க, சுப்மான் கில் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே ஐசிசியின் முக்கிய விதி ஒன்றி மீறியிருப்பதாக கூறப்படுகிறது.
England Vs India: விதியை மீறினாரா சுப்மான் கில்…?
ஆம், சுப்மான் கில் நேற்றைய போட்டியில் அணிந்திருந்த காலுறை (Socks) தான் பிரச்னையை கிளப்பியிருக்கிறது. டெஸ்ட் போட்டியின்போது ஆடை, உபகரணங்கள் அனைத்தும் வெள்ளை நிறத்திலேயே இருக்க வேண்டும். ஆனால் அவர் நேற்று கருப்பு நிற காலுறையை அணிந்திருந்தார். MCC சட்டத்தை பின்பற்றிய ஐசிசியின் விதிமுறைகளில் இதற்கு அனுமதியில்லை. ஐசிசியின் ஆடை மற்றும் உபகரண விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளின் பிரிவு 19.45 இன் படி, டெஸ்ட் போட்டிகளில் வீரர்கள் வெள்ளை, கிரீம் அல்லது வெளிர் சாம்பல் நிற காலுறைகளை மட்டுமே அணிய வேண்டும். இந்த விதி கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்தில் அமலுக்கு வந்தது.
England Vs India: சுப்மான் கில்லுக்கு தடையா?
சுப்மான் கில்லின் இந்த செயலுக்கு அபராதம் விதிக்கப்படலாம். இருப்பினும், இது போட்டி நடுவர் ரிச்சி ரிச்சர்ட்சனின் கையில்தான் இருக்கிறது. ஒருவேளை சுப்மான் கில் விதிமுறையை மீறினார் என்பது உறுதியானால், Level 1 குற்றமாக கருதப்பட்டு இதற்கு 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை போட்டித் தொகையில் அபராதம் விதிக்கப்படும்.
மேலும், ஒருவேளை கில் இது எவ்வித உள்நோக்கமும் இன்றி செய்திருந்தால், அதாவது வெள்ளை காலுறை ஈரமாக இருந்தது என்றால் இதற்கு அபராதம் கிடையாது. Level 1 குற்றத்திற்கு 50% வரை அபராதம் விதிக்கலாம். Level 2 குற்றத்திற்கே அதிக அபராதம் விதிக்கப்படும், தடை விதிக்கவும் வாய்ப்பு ஏற்படும். எனவே, கில் செய்த தவறுக்கு தடை விதிக்க வாய்ப்பு ஏதும் இல்லை.