சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விலக்கு அளித்து சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,
கடந்த 2006 – 2011 திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராகப் பதவி வகித்த க.பொன்முடி, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.
செம்மண் முறைகேடு மூலமாக கிடைத்த பெரும் தொகையைக் கொண்டு ஹவாலா பரிவர்த்தனையில் ஈடுபட்டு வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் குற்றம்சாட்டி, பொன்முடி, அவரது மகன்கள் கவுதம சிகாமணி, அசோக் சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத் துறை சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தது.
சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி பொன்முடி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.ஓம் பிரகாஷ் முன்பாக நடந்தது. அப்போது பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.சுரேஷ், ‘முன்னாள் அமைச்சரான பொன்முடி, திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ-வாகவும், திமுக செயற்குழு உறுப்பினராகவும் பதவி வகிப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’, என கோரினார். அதற்கு அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆட்சேபம் தெரிவித்தார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராவதில் இருந்து பொன்முடிக்கு விலக்களித்து உத்தரவிட்டுள்ளார். அதேநேரம், குற்றச்சாட்டுப் பதிவு உள்ளிட்ட நடைமுறைகளுக்கும், நீதிமன்றம் ஆஜராகும்படி உத்தரவு பிறப்பிக்கும் நேரங்களிலும் நேரில் ஆஜராக வேண்டும், என நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.