புதுடெல்லி: அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு நடத்தி வரும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம்(டிஜிசிஏ), விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது தொடர்பாக பல மீறல்கள் நிகழ்ந்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இதற்குக் காரணமான 3 அதிகாரிகளை அனைத்து பொறுப்புகளில் இருந்தம் நீக்குமாறு, ஏர் இந்தியாவுக்கு டிஜிசிஏ அறிவுறுத்தி உள்ளது.
கடந்த 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர்.
விமான விபத்துக்கான காரணம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் டிஜிசிஏ, ஏர் இந்தியாவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், விமான செயல்பாட்டுத் துறையின் உயர் நிர்வாகப் பிரிவு உட்பட மூன்று அதிகாரிகளை அவர்களின் பொறுப்புகளில் இருந்து நீக்குமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த அதிகாரிகள் மீது தாமதமின்றி உள் ஒழுங்கு நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
“உரிமம், ஓய்வு, சமீபத்திய தேவைகளில் குறைபாடுகள் இருந்துள்ளன. இவை மட்டுமின்றி, விமானக் குழுவினரை திட்டமிடுவது, இயக்குவது ஆகியவற்றில் பல மீறல்கள் நிகழ்ந்துள்ளன.” என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானக் குழுவினர் தொடர்பான திட்டமிடலுக்கான மென்பொருள் கடந்த ஆண்டு மே மாதம் மாற்றப்பட்டது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிசிஏ கோரிய முக்கிய அதிகாரிகளில் ஒருவர், ஒருங்கிணைந்த செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தின் (IOCC) துணைத் தலைவர் ஆவார். IOCC என்பது ஒரு விமான நிறுவனத்தின் நரம்பு மண்டலம் போன்றதாகும். இது பாதுகாப்பான, திறமையான மற்றும் சட்டபூர்வமான முறையில் விமானங்கள் இயக்கப்படுவதை உறுதி செய்வதற்கானது. விமானிகள் மற்றும் கேபின் குழுவினர், அவர்களின் பட்டியல்கள் உட்பட ஒரு விமான நிறுவனத்தின் அனைத்து துறைகளும் இதன் கீழ் வருகிறது.
டிஜிசிஏவின் இந்த உத்தரவை நிறைவேற்றி இருப்பதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் ஒருவர், “நாங்கள் ஒழுங்குமுறை ஆணையத்தின் உத்தரவை ஒப்புக்கொள்கிறோம். உத்தரவை செயல்படுத்தியுள்ளோம். ஒருங்கிணைந்த செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை நிறுவனத்தின் தலைமை செயல்பாட்டு அதிகாரி நேரடியாக மேற்பார்வை இடுவார். பாதுகாப்பு நெறிமுறைகள் மற்றும் நிலையான நடைமுறைகளை முழுமையாகப் பின்பற்றுவதை உறுதி செய்வதில் ஏர் இந்தியா உறுதிபூண்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.
பணியாளர்கள் அட்டவணையில் இனி மீறல்கள் நிகழுமானால், உரிமத்தை நிறுத்திவைப்பது, கட்டுப்பாடுகள் விதிப்பது உட்பட பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டிஜிசிஏ, ஏர் இந்தியாவை எச்சரித்துள்ளது.