இஸ்ரேல், ஈரானில் தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்க சீமான் வலியுறுத்தல்

இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைந்து மீட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடும் போர் மூண்டுள்ள ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் பல்வேறு பணிகளுக்காக சென்றுள்ள தமிழர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது. ஈரான் நாட்டுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த ஏராளமான மீனவர்கள், தாயகம் திரும்ப போதிய பணமின்றி தவித்து வருகின்றனர்.

இத்தனை பெரிய கடற்பரப்பு இருந்தும், தமிழக மீனவர்கள் வாழ வழியின்றி கடல்கடந்து அயல்நாடுகளுக்குச் சென்று மீன்பிடித் தொழில் செய்ய வேண்டிய அவலநிலை நிலவுகிறது. இத்தகைய சூழலில், ஈரான் – இஸ்ரேல் நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களைப் பாதுகாப்பாகத் தாயகம் மீட்டுவந்து, அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய அரசின் தூதரகங்கள் மூலம் தமிழர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைவு படுத்துவதுடன், பயணச் செலவை மத்திய, மாநில அரசுகளே முழுமையாக ஏற்க வேண்டும். இவ்வாறு சீமான் வலியுறுத்தியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.