பஹல்காம் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை கைது செய்தது என்ஐஏ

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக 2 பேரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான லஷ்கர் இ தொய்பாவின் உட்பிரிவான The Resistance Front என்ற அமைப்பு பொறுப்பேற்றது.

இந்நிலையில், இந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக இரண்டு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளது. இது தொடர்பாக என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் வழக்கில் முக்கிய திருப்புமுனையாக, 26 அப்பாவி சுற்றுலாப் பயணிகளைக் கொன்ற மற்றும் 16 பேரைக் கடுமையாகக் காயப்படுத்திய கொடூரமான தாக்குதலை நடத்திய பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ள இரண்டு குற்றவாளிகளில் ஒருவர் பஹல்காமில் உள்ள பட்கோட் பகுதியைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர். மற்றொருவர், பஹல்காமில் உள்ள ஹில் பார்க் பகுதியைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர். தாக்குதலில் ஈடுபட்ட மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளின் அடையாளங்களை இவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். அவர்கள் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா (LeT) உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கு முன்பு பர்வைஸ் மற்றும் பஷீர் ஆகியோர் ஹில் பார்க்கில் உள்ள ஒரு சிறிய வீட்டில், மூன்று ஆயுதமேந்திய பயங்கரவாதிகளுக்கும் தெரிந்தே அடைக்கலம் கொடுத்திருந்தனர். இருவரும் பயங்கரவாதிகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் தளவாட உதவிகளை வழங்கி உள்ளனர். அவர்கள், துரதிர்ஷ்டவசமாக ஏப்ரல் 22ம் தேதி மதிய வேளையில், சுற்றுலாப் பயணிகளை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து கொலை செய்தனர். இதுவரை நடந்த மிகக் கொடூரமான பயங்கரவாத தாக்குதல்களில் இதுவும் ஒன்று.

1967 ஆம் ஆண்டு சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் பிரிவு 19 இன் கீழ் இரண்டு குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.