ஹரியானாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 5 நிமிடம் யோகா பிரேக் அளிக்கப்படும் என்று முதல்வர் நயாப் சிங் சைனி அறிவித்துள்ளார்.
11-வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஹரியானாவின் குருஷேத்ராவில் மாநில அளவிலான யோகா நிகழ்ச்சி, யோகா குரு ராம் தேவ் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி பங்கேற்று பேசியதாவது:
11-வது சர்வதேச யோகா தின கொண்டாட்டம் ஹரியானாவில் கடந்த மே 27-ம் தேதியே தொடங்கி விட்டது. அப்போது முதல் மாநிலம் முழுவதும் யோகாசன நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. யோகாசனம் வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, ஆரோக்கியமாக வாழ்வதற்கான ஒரு முக்கிய அறிவியல். அது ஒட்டுமொத்த மனித குலத்தின் நலனுக்கானது.
ஹரியானாவில் யோகா ஆராய்ச்சியை ஊக்குவிப்பதற்காக புதிய திட்டம் தொடங்கப்படும். இதன் கீழ் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த ஆய்வாளர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.
பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் யோகா படிப்பு தொடங்கப்படும். மாநில விளையாட்டுத் துறை சார்பில் 40 யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் 5 நிமிடம் யோகா பிரேக் அளிக்கப்படும். இவ்வாறு முதல்வர் சைனி கூறினார்.
விழாவில், ஹரியானா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மாநில ஆயுஷ் மற்றும் சுகாதார அமைச்சர் குமாரி ஆர்த்தி சிங் ராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.