Rohit Sharma Latest Interview : இந்திய அணியின் ஒருநாள் போட்டிக்கான கேப்டன் ரோகித் சர்மா அண்மையில் டெஸ்ட் மற்றும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அதனால் இப்போது இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடவில்லை. அதேநேரம் குடும்பத்தினருடன் நேரம் செலவழித்துக் கொண்டிருக்கும் ரோகித் சர்மா, மனைவி மற்றும் குழந்தையுடன் வெளிநாடு சென்றுவிட்டு மும்பை திரும்பியுள்ளார். அங்கு பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தபோது, 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஞாபக மறதியில் செய்த ஒரு தவறை கலகலப்பாக இப்போது நினைவு கூர்ந்திருக்கிறார்.
குறிப்பிட்ட நாளில் போட்டி நடைபெறும்போது டாஸ் வெற்றி பெற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங் செய்யலாம் என அணி நிர்வாக கூட்டத்தில் முடிவெடுத்திருக்கிறார்கள். அப்போதைய பயிற்சியாளர் அனில் கும்பிளே ஆகியோர் டாஸ் சாதகமாக விழுந்தால் பவுலிங் எடுக்கலாம் என பேசிவிட்டு டாஸ் போட சென்றுள்ளார் ரோகித் சர்மா. ஆனால் டாஸ் விழுந்ததும் என்ன செய்ய வேண்டும் என திடீரென மறந்துவிட்டாராம். அதனால் பவுலிங் எடுப்பதற்கு பதிலாக பேட்டிங் எடுத்துவிட்டு பெவிலியனுக்கு திரும்பியிருக்கிறார். அங்கு அனில் கும்பிளே உள்ளிட்டோர் ஏன் இப்படி செய்தீர்கள் என கேட்க, பிட்ச் பேட்டிங் செய்ய சூப்பராக இருக்கிறது என கூறி சமாளித்தாராம். நல்ல வேளையாக அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றியும் பெற்றுவிட்டதாம்.
இது குறித்து ரோகித் சர்மா கலகலப்பாக கூறும்போது, ” எனக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படுவது வழக்கம் தான். முக்கியமான ஏதாவது ஒரு பொருளை ஹோட்டல் ரூம், டீம் பஸ் என எங்கையாவது வைத்துவிட்டு வந்துவிடுவேன். ஆனால், இதனை மிஞ்சிய ஒரு சம்பவம் என் வாழ்க்கையில் நடந்தது. 2013 ஆம் ஆண்டு நான் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக இருந்தேன். சாம்பியன்ஸ் டிராபி போட்டி அது. அனில் கும்பிளே அணி நிர்வாகத்தை கவனித்து வந்தார். போட்டிக்கு முன்பாக நாங்கள் எல்லாம் சேர்ந்து டாஸ் வெற்றி பெற்றால் பவுலிங் எடுக்கலாம் என தீர்மானித்தோம். நானும் அதே முடிவில் டாஸ் போட சென்றுவிட்டேன்.
மைதானத்தில் டாஸ் விழுந்ததும் என்னிடம், நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள் என கமெண்டரி கேட்டார். எனக்கு அப்போது அணி கூட்டத்தில் எடுத்த முடிவு திடீரென மறந்துவிட்டது. ஏதோ ஒரு யோசனையில் பேட்டிங் செய்கிறோம் என கூறிவிட்டேன். பின்னர் நடந்து வரும்போது தான் ஞாபம் வந்தது, டாஸ் வெற்றி பெற்றால் எடுக்கலாம் பவுலிங் என முடிவெடுத்திருந்தோமே என யோசித்தேன். ஆனால் இதனை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. ரூமுக்கு சென்றதும் எல்லோரும் ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டார்கள். நான் பிடச் நன்றாக இருக்கிறது என சொல்லி சமாளித்துவிட்டேன். நல்ல வேளையாக அந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுவிட்டது” என கலகலப்பாக பாட்காஸ்டில் கூறியிருக்கிறார்.