‘ஈரான் மீதான அமெரிக்க தாக்குதலில் நியாயம் ஏதும் இல்லை’ – ரஷ்ய அதிபர் புதின்

மாஸ்கோ: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை என்றும், ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது என்றும் தன்னை சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சரிடம் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் கூறியுள்ளார்.

ஈரான் அணுசக்தி நிலையங்கள் மீதான அமெரிக்க தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மாஸ்கோவில் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, இஸ்ரேல் உடனான போரின் நிலவரம் குறித்து அப்பாஸ் அரக்சியிடம் ரஷ்ய அதிபர் புதின் கேட்டறிந்தார்.

அப்போது, “ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் நியாயம் ஏதும் இல்லை. ஈரான் மக்களுக்கு ரஷ்யா உதவ முயற்சிக்கிறது” என்று புதின் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மத்திய கிழக்குப் பகுதியில் இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதலில். அந்தப் பிராந்தியத்தை சேராத அந்நிய சக்திகளின் ஈடுபாடு உலகையே பெரிய ஆபத்தை நோக்கி நகர்த்துவதாகவும் புதின் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் தேவைக்கு ஏற்ப பல்வேறு வழிகளில் அந்நாட்டுக்கு உதவ ரஷ்யா தயாராக இருப்பதாக ரஷ்ய அதிபர் புதினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறும்போது, “ஈரானுக்கு என்ன தேவை என்பதை கேட்டறிந்து உதவத் தயாராக உள்ளோம். எங்களது மத்தியஸ்த முயற்சிகளை உறுதியாக அளித்து வருகிறோம். இஸ்ரேல் – ஈரான் மோதலில் எங்களது ஆதரவு யாருக்கு என்பதை நாங்கள் தெளிவுப்படுத்தி உள்ளோம். இது முக்கியமானதும் கூட. நாங்கள் ஈரானை ஆதரிக்கிறோம். அமெரிக்கா மற்றும் ரஷ்ய நாட்டு அதிபர்களின் சமீபத்திய பேச்சுவார்த்தைகளில் கூட ஈரான் குறித்து அதிகம் பேசி உள்ளனர்” என்று பெஸ்கோவ் கூறியுள்ளார்.

புதினுக்கு கமேனி கடிதம்: ஈரான் மீது அமெரிக்கா நேரடியாக தாக்குதல் நடத்திய நிலையில், ஈரானின் உச்சத் தலைவர் அயத்துல்லா அலி கமேனி, தங்கள் நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சியை ரஷ்யாவுக்கு அனுப்பினார். மாஸ்கோவில் நடந்த சந்திப்பின்போது, கமேனி அளித்த கடிதம் ஒன்றை அதிபர் புதினிடம் அப்பாஸ் அரக்சி கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தங்களுக்கு ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் உதவிகள் தேவை என ஈரான் தரப்பு கோரி இருக்கலாம் எனத் தெரிகிறது. எனினும், அது எந்த மாதிரியான உதவி என்பது தெரிவிக்கப்படவில்லை. கடந்த 2022-ம் ஆண்டு முதல் உக்ரைன் உடன் ரஷ்யா போரிட்டு வருகிறது. இந்தச் சூழலில் தங்களது நெடுநாள் நட்பு நாடான ஈரானுக்கு எந்த வகையிலான உதவியை ரஷ்யா வழங்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ரஷ்யா உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இணக்கமான போக்கை கடைப்பிடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க தாக்குதலுக்குப் பின்… – ஈரானின் 3 முக்கிய அணுசக்தி தளங்களை அமெரிக்கா குறிவைத்து தாக்கி அழித்ததற்கு பதிலடியாக, ஈரான் மிகவும் சக்தி வாய்ந்த கொராம்ஷர்-4 உள்ளிட்ட 40 ஏவுகணைகளை இஸ்ரேல் மீது ஏவி தாக்குதல் நடத்தியது. இதனிடையே, ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, “இஸ்ரேல் ஒரு பெரிய தவறை செய்துவிட்டது. இது, மிகப் பெரிய குற்றம். அதற்காக இஸ்ரேல் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும். அது இப்போது தண்டிக்கப்பட்டு வருகிறது” என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

அதேவேளையில், இஸ்ரேலின் டெல் அவிவ், ஹைபா, ரிசோன் லெசியொன், பீர்சேபா, சாபத், ஆஸ்கெலான், ஆஸ்டோட், பெய்சன் உள்ளிட்ட பல்வேறு நகரங்களை குறிவைத்து ஈரான் ராணுவம் தொடர்ச்சியாக ஏவுகணைகளை வீசி வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில், இஸ்ரேல் விமான படை நடத்திய தாக்குதலில் ஈரானின் 6 விமான படை தளங்கள் மற்றும் ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. 15 போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் தீயில் எரிந்து நாசமாகின.

அதேபோல், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள ‘எவின்’ சிறைச்சாலையை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் மூலம் குண்டு மழை பொழிந்தன. இதில், அந்தச் சிறைச்சாலை கடும் சேதம் அடைந்துள்ளதாகவும், 15,000-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ள அந்த சிறையில் இருந்து கைதிகள் பலர் தப்பிச் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் – இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையே 11-வது நாளாக மோதல் நீடிக்கும் நிலையில், ஈரான் தாக்குதல்களில் இஸ்ரேலில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். அதேவேளையில், இஸ்ரேல் தாக்குதல்களில் ஈரானில் இதுவரை 950 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 3,450 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.