“நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை விளையாடுவது பணம்தான்” – முதல்வர் ஸ்டாலின் 

சென்னை: “நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம்தான் விளையாடுகிறது” என்று முறைகேடு வழக்கு ஒன்றை சுட்டிக் காட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நீட் தேர்வில் தேர்வில் முறைகேடு செய்து, ரூ.90 லட்சம் பணம் பெற்றுக் கொண்டு, குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெற உதவியதாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது என்ற செய்தியை முன்வைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 23) சமூக வலைதளப் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “நீட்தேர்வு தகுதி அடிப்படையிலானது அல்ல; சந்தை அடிப்படையிலானதுதான் என்பதை நிரூபிக்கும் மற்றொரு வழக்கு இது. அதனால்தான் நாங்கள் சத்தமாகவும், தெளிவாகவும் சொல்கிறோம்… ‘நீட் என்பது சரியானது அல்ல’ என்று. அதற்கு எங்களிடம் எல்லா காரணங்களும் உள்ளன.

தரம், தரம் என்றார்கள். நீட் தேர்வின் ஆதி முதல் அந்தம் வரை பணம், பணம்தான் விளையாடுகிறது. நீட் எனும் தேர்வு முறையே ஒரு ‘Moral’ ஊழல். அது போதாதென்று, வினாத்தாள் தொடங்கி, தேர்வறை முடிவுகள் வெளியீடு வரை ஒவ்வொரு நிலையிலும் நிறைந்திருப்பது குளறுபடிகளும், முறைகேடுகளும் தான்.

நீட் முதல் கோணல், முற்றிலும் கோணல். ஆர்எஸ்எஸ் – பாஜக மாநாடுகளில் காட்சிப் பொருளாக உட்கார நேரமிருக்கும் அதிமுகவினருக்கு இவற்றை எதிர்த்து தங்கள் எஜமானவர்களிடம் பேச நேரமோ, மானமோ இல்லை” என்று முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.