India National Cricket Team: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு (England vs India) இடையிலான ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் (Anderson Tendulkar Trophy 2025) தற்போது நடைபெற்று வருகிறது. லீட்ஸ் நகரில் உள்ள ஹெடிங்லி மைதானத்தில் கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது.
ENG vs IND: 371 ரன்களே இலக்கு
இந்திய அணி (Team India) அதன் இரண்டாவது இன்னிங்ஸை தற்போது நிறைவு செய்திருக்கிறது. இரண்டாவது இன்னிங்ஸில் கேஎல் ராகுல் 137 ரன்கள், ரிஷப் பண்ட் 118 ரன்கள் அடித்ததன் காரணமாக இந்திய அணி 364 ரன்களை அடித்து, இங்கிலாந்து அணிக்கு 371 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது. கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பண்டை தவிர சாய் சுதர்சன் 30, ஜடேஜா 25, கருண் நாயர் 23 ரன்களை அடித்தனர். மற்ற அனைவருமே ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். சிராஜ், பும்ரா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் டக்அவுட்டில் ஆட்டமிழந்தனர்.
ENG vs IND: சொதப்பிய இந்திய டெயிலெண்டர்கள்
ஜடேஜாவுக்கு பின் நான்கு டெயிலெண்டர்கள் பேட்டிங் செய்து வெறும் 4 ரன்களை மட்டுமே பங்களித்துள்ளனர். இதே முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்தின் கடைசி 4 பேட்டர்கள் 72 ரன்களை குவித்ததை கவனிக்க வேண்டும். இந்திய அணி கடைசி 4 பேட்டர்கள் ரன்களை அடிக்காவிட்டாலும் நேரத்தை கடத்தவும் மறுக்கின்றனர். இந்திய அணி ஒரு கட்டத்தில் 333 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என இருந்தது. அதன்பின் வெறும் 16 ரன்களை அடித்து அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் இழந்தது.
முதல் இன்னிங்ஸில் 430 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்ற நிலையில் இருந்து அடுத்து 31 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. இன்றைய நாளில் அரைமணி நேர (6 ஓவர்கள்) ஆட்டமும், நாளைய தினம் முழுவதுமாக (90 ஓவர்கள்) என மொத்தம் 96 ஓவர்களில் இங்கிலாந்து அணிக்கு 371 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஆட்ட நேர முடிவில் 6 ஓவர்களில் 21 ரன்களை விக்கெட் இழப்பின்றி இங்கிலாந்து அடித்துவிட்டது. இன்னும் 90 ஓவர்களில் 350 ரன்களை இங்கிலாந்து அடிக்க துடியாய் துடிக்கும்.
ENG vs IND: வெறியோடு காத்திருக்கும் Bazball
நிச்சயம் இந்திய அணி இங்கிலாந்தை (Team England) விரைவாக ஆல்-அவுட்டாக வேண்டும். இங்கிலாந்து அணி ஆட்டத்தை டிரா செய்யும் நோக்கில் விளையாடாது என்பது 100% உறுதி. மெக்கலம் – பென் ஸ்டோக்ஸ் தலைமையில் இங்கிலாந்து அணி விளையாடி வரும் இந்த Bazball அணுகுமுறையில் இது அடிக்கக் கூடிய இலக்கு எனலாம். எனவே, பும்ரா இன்றே ஓரிரு விக்கெட்டுகளை எடுத்தால் மட்டுமே நாளை இங்கிலாந்தின் மீது அழுத்தத்தை போட முடியும்.
ENG vs IND: இந்தியா தோல்வியடைந்த அந்த ஒரு போட்டி
இந்தியா இதுவரை 59 போட்டிகளில் இந்தியா 350+ ரன்களை எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்துள்ளது. இதில் 42 போட்டிகளில் இந்திய அணி வென்றுள்ளது. 16 போட்டிகளில் டிரா செய்துள்ளது. ஒரே ஒரு போட்டியில் ‘மட்டுமே’ தோல்வியடைந்துள்ளது. சரி ஒருமுறை தானே என நீங்கள் கேட்கலாம். ஆனால் அந்த ஒருமுறையும் இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து உடன்தான். அது பழங்காலத்தில் இருக்கும் என நீங்கள் நினைக்கலாம், ஆனால் சமீபத்தில் 2022ஆம் ஆண்டில்தான் அந்த தோல்வியும் வந்துள்ளது.
2022ஆம் ஆண்டில் எட்ஜ்பாஸ்டன் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் இந்திய அணி 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அப்போதும் இந்திய அணியில் இதே பந்துவீச்சு படைதான் இருந்தது. இதே பும்ரா, சிராஜ், ஷர்துல் தாக்கூர், ஜடேஜா ஆகியோர்தான் அன்றும் இருந்தார்கள். அன்று ஷமி இருந்தார், இன்று அவரிடத்தில் பிரசித் கிருஷ்ணா இருக்கிறார் அதுதான் வித்தியாசம். இரண்டாவது இன்னிங்ஸில் மொத்தமே 3 விக்கெட்டுகள் மட்டுமே சாய்ந்தது. அதிலும் ஒரு ரன் அவுட். மற்ற 2 விக்கெட்டுகளையும் பும்ராவே எடுத்தார். அலெக்ஸ் லீக் 56, கிராலி 46, ரூட் 142, பேர்ஸ்டோவ் 114 என ரன்களை குவித்தனர். அப்போது இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏறத்தாழ ஒன்றரை நாள்கள் கிடைத்தது. ஒன்று ஒரே நாள் கிடைத்துள்ளது. அப்போதும் இதே பென் ஸ்டோக்ஸ் – மெக்கலம் தலைமையில்தான் இங்கிலாந்து விளையாடியது.