England vs India 1st Test: இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில், நான்காம் நாள் ஆட்டம் இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது.
England vs India: பரபரப்பான கட்டத்தில் டெஸ்ட் போட்டி
முதல் இன்னிங்ஸில் இந்தியா 471 ரன்களை அடித்த நிலையில், இங்கிலாந்து அணியும் முதல் இன்னிங்ஸில் 465 ரன்களை எடுத்து மிரட்டியது. வெறும் 6 ரன்கள் முன்னிலையுடன் நேற்று மூன்றாவது செஷனில் இந்திய அணி அதன் பேட்டிங்கை தொடங்கியது. நேற்றைய மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 90 ரன்களை எடுத்து ஜெய்ஸ்வால் 4, சுதர்சன் 30 ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்தது.
கேஎல் ராகுல் 47 ரன்களுடனும், கில் 6 ரன்களுடன் இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை இந்தியா தொடங்கியது. இன்றைய ஆட்டத்தின் 6வது பந்திலேயே கேப்டன் சுப்மான் கில் ஆட்டமிழந்தார். பிரைடன் கார்ஸ் வீசிய பந்தில் கில் 8 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த ரிஷப் பண்ட், கேஎல் ராகுலுடன் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இன்றைய மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்களை எடுத்தது.
England vs India: கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் சதம்
தொடர்ந்து, கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் இருவரும் சதம் அடித்திருக்கும் நிலையில், இந்த ஜோடி தற்போது 150 ரன்களுக்கும் மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகிறது. இந்த சூழலில், இன்று முழுவதும் இந்திய அணி பேட்டிங் விளையாடியாக வேண்டும். ஏனென்றால் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் 2வது செஷனில் இங்கிலாந்து விளையாடிய விதத்தை பார்த்தால் நிச்சயம் 350, 400 ரன்களை ஒரே நாளில் சேஸ் செய்ய முயற்சிக்கும் எனலாம். நேற்றைய 2வது செஷனில் 23.4 ஓவர்களில் 138 ரன்களை இங்கிலாந்து அணி குவித்திருந்தது.
England vs India: இங்கிலாந்து நிச்சயம் டிரா செய்யாது… ஏன்?
இந்த வேகத்தில் அடித்தால் நிச்சயம் பெரிய ஸ்கோரையும் பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த இங்கிலாந்து அணி சேஸ் செய்ய வாய்ப்புள்ளது. ஜாக் கிராலி தொடங்கி கிறிஸ் வோக்ஸ் வரை என நம்பர் 8 ஸ்பாட்டிலும் இங்கிலாந்து அணி பேட்டர்களை அடுக்கிவைத்திருக்கிறது. டெயிலெண்டர்களும் அவ்வளவு எளிதில் விக்கெட்டை கையில் கொடுத்துவிட மாட்டார்கள். அதுவும் இந்த Bazball அணுகுமுறையில் இங்கிலாந்து டிராவுக்காக விளையாடியதே இல்லை.
England vs India: 400 டார்க்கெட் வச்சாலும் சிக்கல் தான்… ஏன்?
மெக்கலம் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பின்னர் இதுவரை 35 போட்டிகளில் விளையாடி 22 போட்டிகளில் வென்றுள்ளது. 12 போட்டிகளில் தோல்வியைடந்துள்ளது. ஒரே ஒரு போட்டி மட்டுமே டிராவானது. அந்த ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதும் டிராவுக்கு ஒரு காரணம் எனலாம். அப்படியிருக்க, இந்திய அணி இன்று முழுவதும் பேட்டிங் செய்து 400 ரன்களை இலக்காக நிர்ணயித்தாலும் கூட இந்தியாவுக்கு சிக்கல்தான்.
England vs India: இந்திய அணி என்ன செய்ய வேண்டும்?
எனவே, இந்திய அணி நாளை காலை வரை பேட்டிங் செய்வதை உறுதிசெய்ய வேண்டும். குறைந்த ஓவர்களை மட்டும் கொடுத்து இங்கிலாந்தை சேஸிங் செய்ய அழைக்க வேண்டும். இங்கிலாந்து நிச்சயமாக டிராவுக்காக விளையாடுவது. குறைந்தபட்சம் ஆரம்பக்கட்டத்தில்… எனவே, இந்திய அணி நிச்சயம் 350 ரன்களுக்கும் மேல் அடிக்க வேண்டும், அதுவும் நாளைய கடைசி நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் 15 ஓவர்களுக்காவது பேட்டிங் செய்ய வேண்டும்.
England vs India: இங்கிலாந்தின் அதிகபட்ச சேஸிங் இதுதான்…!
டெஸ்டில் இங்கிலாந்தின் அதிகபட்ச சேஸிங்கே இந்தியாவுக்கு எதிராகதான் உள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு இங்கிலாந்து – இந்தியாவுக்கு இடையே எட்ஜ்பாஸ்டன் நகரில் நடந்த 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா 378 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை இங்கிலாந்து அணி ஒன்றரை நாள்களில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிகரமாக சேஸிங் செய்து அந்த தொடரை 2-2 சமன் செய்தது.
அந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அலெக்ஸ் லீஸ் 56, ஜாக் கிராலி 46, ஜோ ரூட் 142, ஜானி பேர்ஸ்டோ 114 ரன்களை அடித்தனர். அந்த போட்டியிலும் பென் ஸ்டோக்ஸ்தான் கேப்டன். மெக்கலம்தான் பயிற்சியாளர். எனவே, இந்தியா இந்த விஷயத்தில் கூடுதல் உஷாராக இருக்க வேண்டும்.
England vs India: 2019 ஹெடிங்லி டெஸ்ட் மறக்க முடியாது…
அதேபோல், 2019ஆம் ஆண்டு இதே ஹெடிங்லி மைதானத்தில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 359 ரன்களை 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிகரமாக சேஸிங் செய்தது. அந்த போட்டியில் ஜாக் லீச் உடன் பென் ஸ்டோக்ஸ் 135 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்து, கடைசி வரை நின்று ஆட்டத்தை முடித்துக்கொடுத்தார் என்பதையும் மறக்கக் கூடாது. இந்த இரண்டு போட்டிகள்தான் டெஸ்ட் அரங்கில் இங்கிலாந்தின் பெஸ்ட் சேஸிங் எனலாம்.