டெஹ்ரான்: உலகையே அச்சுறுத்திக் கொண்டிருந்த நிலையில் ஈரான்-இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இந்நிலையில், கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கின. இதில் 3 அணுசக்தி தளங்களும் முழுமையாக தகர்க்கப்பட்டன.
இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் நள்ளிரவு கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க விமானபடைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் 19 ஏவுகணைகளை வீசியது. அவை நடுவானில் அழிக்கப்பட்டன. இந்த விமான படைத்தளத்தில் 11,000 அமெரிக்க வீரர்களும் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. ஈரான் தாக்குதலில் உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை. தொடர்ந்து ஈரானும், இஸ்ரேலும் கடுமையான தாக்குதல்களை நடத்தின. ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் 100-க்கும் மேற்பட குண்டுகளை வீசின.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல்அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. இந்த சூழலில் கத்தார் நாடு சமரச முயற்சியில் இறங்கியது. அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் நாடுகளின் தலைவர்களுடன், கத்தார் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது.இதைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சமூகவலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: இஸ்ரேல்-ஈரான் இடையே முழுமையான போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. 12 நாட்கள் நீடித்த போருக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. போர் நிறுத்தத்தை இரு நாடுகளும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். அமைதி திரும்பியிருப்பதால், மத்திய கிழக்கு பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது.
கத்தாரில் உள்ள விமான படை தளம் மீது ஈரான் ராணுவம் வீசிய ஏவுகணைகளை நடுவானில் அழித்துவிட்டோம். இந்த தாக்குதல் குறித்து ஈரான் தரப்பில் முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற்காக ஈரானுக்கு நன்றி. இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்துஉள்ளார்.
ஈரான் தேசிய பாதுகாப்பு கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், “ஈரானின் ராணுவ நடவடிக்கைகள் காரணமாக எதிரி நாடு (இஸ்ரேல்) போரை நிறுத்தியிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டது. ஈரான், இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக ஈரான் அரசு தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ஆனால், இஸ்ரேல் தரப்பில் மவுனம் காக்கப்பட்டது. இந்த சூழலில் இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கர்ட்ஸ் நேற்று கூறும்போது, “போர் நிறுத்தத்தை மீறி ஈரான் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. இதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். டெஹ்ரானில் உள்ள ராணுவ நிலைகள் அழிக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்தார்.
ஈரான் ராணுவத்தின் ஐஆர்ஜிசி தளபதி முகமது கூறும்போது, “எங்களது 3 அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க விமானப் படை தளம் மீது நாங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தினோம். சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்த பிறகு இஸ்ரேல் மீது நாங்கள் தாக்குதல் நடத்தவில்லை. அமெரிக்காவோ, இஸ்ரேலோ மீண்டும் தாக்கினால், தக்க பதிலடி கொடுப்போம்” என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் கண்டிப்பு: இதற்கிடையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் மீண்டும் வெளியிட்ட பதிவில், “சண்டை நிறுத்தம் அமலுக்கு வந்துவிட்டது. அதை இருதரப்பும் மீறக்கூடாது”என்று கண்டித்துள்ளார். மேலும், அதிபர் டொனால்டு ட்ரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது போர் நிறுத்தத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று அவர் கண்டிப்புடன் கூறினார்.பின்னர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அமைதியை நிலைநாட்ட ஈரான் விரும்புகிறது. அந்நாடு மட்டுமல்ல, இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறியிருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை கடும் அதிருப்தி அளிக்கிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் அனைத்தும் உடனடியாக தங்களது விமான தளங்களுக்கு திரும்ப வேண்டும். ஈரான் மீது எந்த தாக்குதலும் நடத்தக்கூடாது. ஈரான் மக்களில் யாரும் பாதிக்கப்படக் கூடாது. இன்று (நேற்று) காலையில் ஈரானின் ஒரு ஏவுகணை இஸ்ரேலில் விழுந்திருக்கிறது. அது தவறுதலாக ஏவப்பட்டு இருக்கலாம். இதை பெரிதுபடுத்தக்கூடாது.
ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஈரானின் போர்டோ அணுசக்தி தளம் முழுமையாக தகர்க்கப்பட்டுவிட்டது. இனி ஈரானால் அணு ஆயுதங்களை தயாரிக்க முடியாது. 12 நாட்களுக்கு பிறகு போர் நிறுத்தம் ஏற்பட்டிருக்கிறது. இஸ்ரேலும் ஈரானும் போர் நிறுத்தத்தை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் ட்ரம்பின் எச்சரிக்கையை தொடர்ந்து, இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று தாக்குதலை கைவிட்டு விமான படைத் தளங்களுக்கு திரும்பின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “ஈரானுக்கு எதிரான போரில் எங்களது லட்சியத்தை அடைந்துவிட்டோம். எங்களுக்கு முழு ஆதரவு அளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம். போர் நிறுத்தத்தை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம். எனினும் போர் நிறுத்தம் மீறப்பட்டால், தக்க பதிலடி கொடுக்க தயங்க மாட்டோம்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.இஸ்ரேல், ஈரான் இடையே போர் நிறுத்தம் அமல் செய்யப்பட்டிருப்பதை இந்தியா, ரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா உள்ளிட்ட நாடுகள் வரவேற்றுள்ளன.