ஆஸ்ட்ரவா,
இந்திய முன்னணி ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா சமீபத்தில் பாரீஸ் டைமண்ட் லீக்கில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். அடுத்து செக்குடியரசு நாட்டின் ஆஸ்ட்ரவா நகரில் இன்று நடக்கும் கோல்டன் ஸ்பைக் தடகள சாம்பியன்ஷிப்பில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி 27 வயதான நீரஜ் சோப்ரா அளித்த பேட்டியில் கூறியதாவது, செக்குடியரசின் தலைசிறந்த வீரர் மற்றும் சிறந்த பயிற்சியாளரான ஜன் ஜெலெஸ்னியுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த ஆண்டில் ஏற்கனவே 90 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்து விட்டேன்.
அதன் பிறகு எனது தொழில்நுட்பத்தில் இன்னும் கொஞ்சம் முன்னேற்றம் கண்டுள்ளேன். எனவே அடுத்த முறை எவ்வளவு தூரம் வீசுகிறேன் என்பதை பார்க்கலாம். இந்த சீசனில் டோக்கியோவில் செப்டம்பரில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் வென்று சாதிப்பதே எனது பிரதான இலக்கு.
இப்போது நான் நல்ல நிலையில் இருக்கிறேன். ஆனால் ஒவ்வொரு முறையும் 90 மீட்டருக்கு மேல் வீச வேண்டும் என்று எனக்குள் நெருக்கடியை உருவாக்க விரும்பவில்லை. ஆனாலும் அதிக தூரம் வீச கடினமாக முயற்சிப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.