ஐ.நா.வின் நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசை: டாப் 100-ல் முதல் முறையாக நுழைந்த இந்தியா

புதுடெல்லி: ஐ.நா.வின் உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் (SDG) தரவரிசையில் இந்தியா முதல்முறையாக முதல் 100 இடங்களுக்குள் நுழைந்துள்ளது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கவனம் கொடுக்க வேண்டிய அம்சங்கள் மற்றும் அதற்கான நிலையான வளர்ச்சி இலக்குகளை ஐநா வரையறுத்துள்ளது. அதில் ஆண்டுதோறும் ஏற்படும் முன்னேற்றங்களுக்கு ஏற்ப நாடுகளை அது தரவரிசைப்படுத்துகிறது.

அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான உலகளாவிய நிலையான வளர்ச்சி இலக்குகள் தரவரிசையை ஐநா இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, 193 நாடுகள் கொண்ட பட்டியலில் முதல்முறையாக இந்தியா 67 புள்ளிகளுடன் 99-வது இடத்தைப் பிடித்துள்ளது. 87 புள்ளிகளுடன் ஃபின்லாந்து முதலிடத்திலும், 85.7 புள்ளிகளுடன் ஸ்வீடன் 2-வது இடத்திலும், 85.3 புள்ளிகளுடன் டென்மார்க் 3-வது இடத்திலும் உள்ளன.

ஜெர்மனி 4-வது இடத்திலும், பிரான்ஸ் 5-வது இடத்திலும், ஆஸ்ட்ரியா 6-வது இடத்திலும், நார்வே 7-வது இடத்திலும், குரோஷியா 8-வது இடத்திலும், போலந்து 9-வது இடத்திலும், செக் குடியரசு 10-வது இடத்திலும் உள்ளன. முதல் 20 இடங்களில் 19 நாடுகள் ஐரோப்பாவைச் சேர்ந்தவையாக உள்ளன. ஜப்பான் 8.7 புள்ளிகளுடன் 19-வது இடத்தைப் பிடித்துள்ளது.

சீனா 74.4 புள்ளிகளுடன் 49-வது இடத்திலும், அமெரிக்கா 75.2 புள்ளிகளுடன் 44-வது இடத்திலும் உள்ளன. பூட்டான் 70.5 புள்ளிகளுடன் 74-வது இடத்திலும், நேபாளம் 68.6 புள்ளிகளுடன் 85-வது இடத்திலும், வங்கதேசம் 63.9 புள்ளிகளுடன் 114-வது இடத்திலும், பாகிஸ்தான் 57 புள்ளிகளுடன் 140-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவின் கடல்சார் அண்டை நாடுகளான மாலத்தீவு 53வது இடத்திலும், இலங்கை 93வது இடத்திலும் உள்ளன.

புள்ளி விவரங்கள் தெரிவிக்கும் தகவல்களின் அடிப்படையில், இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்த அறிக்கையின் ஆசிரியர்கள், உலக அளவில் SDG முன்னேற்றம் தேக்கமடைந்துள்ளதாகவும், 2015 ஆம் ஆண்டில் ஐ.நா. உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்ட 17 இலக்குகளில் 17 சதவீதம் மட்டுமே 2030 ஆம் ஆண்டுக்குள் அடையப்படும் என்றும் கணித்துள்ளனர்.

“மோதல் போக்குகள், உட்கட்டமைப்பு வசதிகள் தாக்குதலின் எளிய இலக்காகுதல் மற்றும் திட்டங்களுக்கு செயல்வடிவம் கொடுப்பதில் இருக்கும் நிதித் தட்டுப்பாடு ஆகியவை உலகின் பல பகுதிகளில் SDG முன்னேற்றத்தைத் தடுக்கின்றன.” என்று இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.