தமிழகத்துக்கான கல்வி பங்களிப்பு தொகை ரூ.2,152 கோடியை விடுவிக்க ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை

சென்னை: மாணவர்களின் நலன் கருதி தமிழகத்துக்கான கல்வி பங்களிப்புத்தொகை ரூ.2,152 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அக்கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியா முழுவதும் 15 லட்சம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு கூட்டம் அகில இந்திய தலைவர் கே.சி.ஹரி கிருஷ்ணன் தலைமையில் டெல்லியில் ஜூன் 25, 26-ம் தேதிகளில் (புதன், வியாழன்) நடைபெற உள்ளது. இதில் தமிழகம், கேரளம் ஆந்திரம், தெலங்கானா, அரியானா ஒடிஷா, மேற்கு வங்கம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 26 அமைப்புகளைச் சார்ந்த நிர்வாகிகள் உரையாற்றுகின்றனர்.

தேசிய ஓய்வூதியத் திட்டம், ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை ரத்து செய்துவிட்டு நாடு முழுவதும் உள்ள அனைத்து வகை ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், பி.எம். ஸ்ரீ திட்டத்தில் தமிழக அரசு கையெழுத்திடாத காரணத்தினால் கடந்த கல்வி ஆண்டுக்கான மத்திய அரசின் பங்களிப்புத்தொகை ரூ.2,152 கோடியை தமிழக மாணவர் நலன் கருதி உடனடியாக விடுவிக்க வேண்டும்,

மற்றும் இந்தியா முழுவதும் காலியாக உள்ள பல லட்சம் ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக முறையான காலமுறை ஊதியத்தில் நிரப்ப வேண்டும், தொகுப்பூதியம், மதிப்பூதியம் ஒப்பந்த ஊதியம் உள்ளிட்ட ஊதிய முறைகளை ரத்து செய்து அனைத்து அரசு ஊழியர்களுக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், மாணவர் நலன்களுக்கு எதிராக உள்ளதால் தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ ரத்துசெய்ய வேண்டும் என்பன உள்பட 8 தீர்மானங்கள் இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.