சென்னை: பணப்பலன்கள் வழங்கக்கோரி ஏராளமான வழக்குகள் தொடரப்படுவதால், தமிழகத்தின் நிதிநிலை நெருக்கடியில் உள்ளதா? என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சமையல் எண்ணெய் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் சமீபத்தில் கோரப்பட்டது.
இந்த டெண்டரில் பங்கேற்று ஒப்பந்தம் பெற்ற கேடிவி ஹெல்த் ஃபுட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம், சமையல் எண்ணெய்யை விநியோகம் செய்தது. இந்த வகையில் ரூ.141 கோடியே 22 லட்சத்தை தமிழக அரசு தங்களுக்கு வழங்க வேண்டியுள்ளது என்றும், டெண்டர் நிபந்தனைகளின்படி 30 நாட்களில் இந்த தொகையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்பதால் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அந்நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் நிறுவனம் தரப்பில், ‘நிலுவைத்தொகை பாக்கி இருந்தாலும் தொடர்ந்து சமையல் எண்ணெய் சப்ளை செய்து வருவதால், தற்போது பாக்கித் தொகை ரூ. 200 கோடிக்கு மேல் சென்று விட்டது.
ஆனால் எங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை வழங்காமல் புதிதாக டெண்டர் கோரும் நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருகிறது’ என குற்றம்சாட்டப்பட்டது. அப்போது நீதிபதி, ‘கடந்த 2 வாரங்களாக ஓய்வுக்கால பணப்பலன்கள் வழங்கப்படவில்லை என்றும், அரசு வழங்கவேண்டிய தொகைகள் தரப்படவில்லை எனவும் கூறி ஏராளமான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகின்றன.
தற்போது தமிழகத்தி்ல் என்ன நடக்கிறது என்பது தெரியவில்லை?. மாநில அரசு இதுபோன்ற பணப்பலன்கள் வழங்கும் விஷயத்தில் முன்னுதாரணமாகத் திகழ வேண்டும். இதையெல்லாம் பார்க்கும்போது தமிழகத்தின் நிதிநிலை நெருக்கடியில் உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இது அரசை நடத்தும் வழியல்ல’ எனக் கருத்து தெரிவி்த்தார்.
பின்னர், இந்த வழக்கில் மனுதாரர் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையை வழங்குவது குறித்து அரசின் கருத்தைக் கேட்டு தெரிவிக்கும்படி அரசு தரப்பு வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூன் 27-க்கு தள்ளிவைத்துள்ளார்.