புதுடெல்லி,
திருச்சியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் அடைக்கப்பட்டுள்ள பாஸ்கரன் என்பவரை நாடு கடத்த தமிழ்நாடு அரசு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரியும், டெல்லியில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் மனிதாபிமான அடிப்படையில் வழங்கப்படும் விசாவை பெறுவதற்கான நேர்காணலில் பங்கேற்க அனுமதிக்க கோரியும் வக்கீல் ஏ.எஸ்.வைரவன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய்யப்பட்டது.
இந்த மனுவை நீதிபதிகள் கே.வி.விஸ்வநாதன், என்.கோட்டீஸ்வர சிங் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது பாஸ்கரன் சார்பில் மூத்த வக்கீல் ஜெயந்த் முத்துராஜ், வக்கீல் பாரதி மோகன் ஆகியோர் ஆஜராகி, நாடு கடத்த தமிழ்நாடு அரசு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டனர்.
இதை பதிவு செய்த கொண்ட சுப்ரீம் கோர்ட்டு, நாடு கடத்த தமிழ்நாடு அரசு கடந்த 2019-ம் ஆண்டு நவம்பர் மாதம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும் மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க மத்திய அரசுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பதில் அளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்டு 4-ந்தேதிக்கு தள்ளிவைத்தது.