சென்னை: நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும், கலாச்சாரத்தையும் விட்டுக்கொடுக்கக் கூடாது என்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் ஆளுநர் கூறினார்.
தமிழக ஆளுநர் மாளிகை சார்பில், மேற்கு வங்க மாநிலம் உருவான தினம் நேற்று கொண்டாடப்பட்டது. ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இவ்விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது: இந்தியா பல வேற்றுமைகளை கொண்ட நாடு. இங்கு ஏதாவது நடந்தால் மேற்கு வங்கத்தில் அதன் எதிர்வினை இருக்கும்.
அதேபோல் மேற்கு வங்கத்தில் ஏதாவது நடந்தால் அதன் எதிர்வினை தமிழகத்தில் உணரப்படும். மேற்கு வங்கம் தனியாக பிரிக்கப்பட்டபோது தமிழகத்தில் அதற்கு எதிர்வினை இருந்தது. மகாகவி பாரதியாரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டு வங்கக்கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி பல கவிதைகளை படைத்துள்ளார்.
மேற்கு வங்கத்துக்கும் தமிழகத்துக்கும் சிறிய தொடர்பு இருக்கும்போதே அம்மாநிலத்தில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் மக்கள் தமிழகத்துக்கு வந்துசெல்வர். ஆனால், காலப்போக்கில் இந்த ஒற்றுமை கொஞ்சம் கொஞ்சமாக மறைய தொடங்கியது. மக்கள் மொழியால் தங்களை பிரித்துக் கொண்டனர். நாம் எங்கு வாழ்ந்தாலும் நமது அடையாளத்தையும் கலாச்சாரத்தையும் விட்டுக் கொடுக்கக் கூடாது. தமிழகத்தில் வாழும் மேற்கு வங்க மக்கள் அதை சிறப்பாகச் செய்து வருகின்றனர்.
பொருளாதார வளர்ச்சி: இந்திய நாட்டை எத்தனையோ ஆட்சியாளர்கள் ஆட்சி செய்துள்ளனர். ஆனால், யாராலும் மக்களின் ஒற்றுமையை எதுவும் செய்ய முடியவில்லை. இந்திய மக்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஒன்று திரண்டு போராடியபோது அந்த ஒற்றுமை எதிரொலித்தது. இன்று நாம் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைந்து வருகிறோம். உலக பொருளாதார வளர்ச்சியில் 2014-ல் 11-வது இடத்தில் இருந்த நாம் கடந்த 10 ஆண்டில் 4-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறோம். இவ்வாறு ஆளுநர் பேசினார்.