ஜம்மு: பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு பேரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) 5 நாள் காவலில் எடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உட்பட 26 பேர் உயிரிழந்தனர். 16 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களாக தீவிர விசாரணை நடைபெற்றது.
இதில், மிகப்பெரும் திருப்புமுனையாக பஹல்காமின் பட்கோட்டைச் சேர்ந்த பர்வைஸ் அகமது ஜோதர் மற்றும் பஹல்காமின் ஹில் பார்க்கைச் சேர்ந்த பஷீர் அகமது ஜோதர் ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
இவர்கள் இருவரும்தான் பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்துள்ளனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பஹல்காமில் ஆயுதமேந்தி தாக்குதலில் ஈடுபட்ட மூன்று தீவிரவாதிகளின் அடையாளங்களையும் என்ஐஏவிடம் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த மூன்று தீவிரவாதிகளும் தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பா உடன் தொடர்புடைய பாகிஸ்தானியர்கள் என்பதையும் என்ஐஏ உறுதிப்படுத்தியுள்ளது.
பஹல்காம் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இருவரும் ஜம்மு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிபதி ரித்தேஷ் குமார் துபேயின் முன்னிலையில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, ஜூன் 27-ம் தேதி வரை அதாவது ஐந்து நாட்களுக்கு என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
என்ஐஏ விசாரணையின்படி, தாக்குதலுக்கு முன்பு, பர்வைஸ் மற்றும் பஷீர் ஆகியோர் ஹில் பார்க்கில் உள்ள ஒரு பருவகால குடிலில் தீவிரவாதிகள் என்று தெரிந்தே பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட அந்த மூவரையும் தங்கவைத்துள்ளனர். அவர்களுக்கு உணவு மற்றும் தளவாட உதவிகளையும் அந்த இருவரும் வழங்கியுள்ளனர்.
சுற்றுலாப் பயணிகளை அவர்களின் மத அடையாளத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து கொல்லும் இதுவரையில்லாத மிகக் கொடூரமான தாக்குதலை அந்த 3 தீவிரவாதிகளும் நடத்தியதாக என்ஐஏ தெரிவித்துள்ளது.