மடாதிபதியுடன் ஒரே அறையில் தங்கிய தாய், மகள்… அடுத்து நடந்த பரபரப்பு

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் மூடலகி தாலுகா சிவப்புரா கிராமத்தில் அடவி சித்தேஸ்வரா மடம் உள்ளது. இங்கு மடாதிபதியாக அடவி சித்தேஸ்வரா சாமியார் உள்ளார். கடந்த சில நாட்களாக மடத்தில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்தநிலையில் சம்பவத்தன்று பாகல்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் தனது 15 வயது மகளுடன் மடத்தில் வந்து தங்கி இருந்துள்ளார். அதாவது மடாதிபதியுடன் ஒரே அறையில் அந்த பெண், மகளுடன் தங்கியிருந்தார். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனால் கோபம் அடைந்த அவர்கள், மடத்துக்குள் புகுந்து, அங்கிருந்த பெண் மற்றும் அவரது மகள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர்.

அந்த பெண், சிறுமி, தங்களை விட்டுவிடும்படி கூறியும் அவர்கள் கேட்கவில்லை. ஆடைகளை பிடித்து இழுத்ததுடன் கிழிக்க முயன்றனர். இதை பார்த்த மடாதிபதி அடவி சித்தேஸ்வரா சாமியார் பொதுமக்களை தடுக்க முயன்றார். அப்போது அவர் மீதும் சில வாலிபர்கள் தாக்கினர். மேலும் மடத்தில் இருந்த சில பொருட்களையும் அடித்து, உடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து மூடலகி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து வந்த போலீசார் பெண் மற்றும் சிறுமியை மீட்டு, அறிவுரை கூறி அங்கிருந்து சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மடாதிபதியை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், பொது மக்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய மடாதிபதி, பெண்களுடன் நெருக்கமாக இருப்பது வேதனை அளிக்கிறது.

மேலும் சட்டவிரோத செயல்களும் நடக்கிறது. எனவே போலீசார் மடாதிபதி மீது நடவடிக்கை எடுப்பதுடன், மடத்துக்கும் சீல் வைக்க வேண்டும் என்று கூறினர். இதை கேட்ட போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் இதுகுறித்து மூடலகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.