புதுடெல்லி: பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான திறனை மேம்படுத்த ரூ.2,000 கோடி மதிப்பிலான கொள்முதல் ஒப்பந்தங்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அவசரகாலக் கொள்முதல் தொடர்பான நெறிமுறைகளின் கீழ் பாதுகாப்பு அமைச்சகம் 13 ஒப்பந்தங்களை இறுதி செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக ரூ. 1,981.90 கோடி மதிப்பில் இந்த ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன. அவசரகால கொள்முதல் ஆணையின் கீழ் கொள்முதல் நடைமுறைகள் விரைவுப்படுத்தப்படும். பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படும் பாதுகாப்பு படையினரின் செயல்பாட்டுத் திறன்களை மேம்படுத்துவதை இந்தக் கொள்முதல் நடவடிக்கைகள் நோக்கமாகக் கொண்டுள்ளன.
கொள்முதல் செய்யப்படும் ஆயுத தளவாடங்கள் விவரம்: ஒருங்கிணைந்த ட்ரோன் கண்டறிதல் மற்றும் இடைமறிப்பு அமைப்புகள், குறைந்த அளவிலான இலகுரக ரேடார்கள், மிகக் குறுகிய தூர வான் பாதுகாப்பு அமைப்புகள், ஏவுகணைகள், தொலைதூரத்தில் இயக்கப்படும் வான்வழி வாகனங்கள் (RPAVகள்), செங்குத்தாக மேலெழுந்து சென்று அதே போன்று தரையிறங்கக் கூடிய போர் விமானங்கள், குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், விரைந்து எதிர்வினையாற்றும் கனரக மற்றும் நடுத்தர போர் வாகனங்கள், இரவில் இலக்கை அடையாளம் காணும் வகையிலான துப்பாக்கிகள், இத்தகைய தளவாடங்களை கொள்முதல் செய்வதன் மூலம், அதிகரித்து வரும் பாதுகாப்பு தொடர்பான சவால்களை பாதுகாப்பு படை எதிர்கொள்ள உதவிகரமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.