புதுடெல்லி: அவசரநிலை பிரகடனத்தின் 50-ம் ஆண்டு நிறைவை அனுசரிப்பது குறித்த தீர்மானம் இன்று (ஜூன் 25) மத்திய அமைச்சரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்த மத்திய அரசின் செய்திக் குறிப்பு: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டதையும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் உணர்வுகளைத் தகர்க்கும் முயற்சியையும் துணிச்சலுடன் எதிர்த்த எண்ணற்ற நபர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து கவுரவிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.
1974-ம் ஆண்டு நவநிர்மாண் இயக்கம், சம்பூர்ண கிராந்தி இயக்கம் ஆகியவற்றுக்கும் தடை விதிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், அரசியலமைப்பு ரீதியாக உத்தரவாதம் அளிக்கப்பட்ட ஜனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டு, பின்னர் கற்பனை செய்து பார்க்க முடியாத வகையில் பல இன்னல்களை சந்தித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அவசரநிலை பிகரடனத்தின் அத்துமீறல்களுக்கு எதிரான அவர்களது துணிச்சலுக்கும் எதிர்ப்புக்கும் மத்திய அமைச்சரவை அஞ்சலி செலுத்தியது.
இந்திய வரலாற்றில் அரசியலமைப்புச் சட்டம் சீர்குலைக்கப்பட்டு, குடியரசு மற்றும் ஜனநாயக உணர்வு சிதைக்கப்பட்டும், கூட்டாட்சித் தத்துவம் சீர்குலைக்கப்பட்டதற்கும், அடிப்படை உரிமைகள், மனித சுதந்திரம் மற்றும் கண்ணியம் ஆகியவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்ட மறக்க முடியாத அத்தியாயமாகும். இது அரசியலமைப்பு படுகொலை தினத்தின் 50 ஆண்டுகளைக் குறிப்பதாக உள்ளது.
மக்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், நாட்டின் ஜனநாயக நெறிமுறைகளின் நெகிழ்வுத் தன்மை மீதும் அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளதாக மத்திய அமைச்சரவை மீண்டும் தெரிவித்துள்ளது. சர்வாதிகார செயல்பாடுகளை எதிர்த்து அரசியலமைப்புச் சட்டம் அதன் ஜனநாயகக் கட்டமைப்புகளை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தவர்களிடமிருந்து உத்வேகம் பெறுவது இளைஞர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இன்றியமையாத ஒன்றாகும்.
ஜனநாயகத்தின் தாயாக திகழும் அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்புகளைப் பாதுகாப்பதற்கும் ஒரே தேசமாக அதன் ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி தத்துவத்தின் உணர்வை நிலை நிறுத்துவதற்கும் நாம் அனைவரும் உறுதியேற்க வேண்டும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அழைப்பு: சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவுகளில், “அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட, இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றில் 50 ஆண்டுகளை இந்த நாள் குறிக்கிறது. இந்திய மக்கள் இந்த தினத்தை அரசியல் சட்ட படுகொலை தினம் என குறிப்பிடுகிறார்கள்.
இந்நாளில் இந்திய அரசியல் சட்டத்தில் இடம் பெற்றிருந்த மாண்புகள் கைவிடப்பட்டன, அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டன, பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது, பல அரசியல் தலைவர்கள், சமூக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சாமானிய மக்கள் சிறையில் அடைக்கப்பட்ட காங்கிரஸ் அரசு அதிகாரத்தில் இருந்த அந்த காலகட்டம் ஜனநாயகம் சிறையில் அடைக்கப்பட்டதாக இருந்தது.
நமது அரசியல் சட்ட உணர்வு மதிக்கப்படாத நிலையை, நாடாளுமன்றத்தின் குரல் முடக்கப்பட்டதை, நீதிமன்றங்களை கட்டுப்படுத்த மேற்கொண்ட முயற்சியை இந்தியர் எவரும் மறக்கமாட்டார்கள். அவர்களின் சூழ்ச்சிகளுக்கு 42-வது திருத்தம் முதன்மையான உதாரணமாகும். ஏழை எளிய, விளிம்புநிலை மக்கள் குறி வைக்கப்பட்டதோடு அவர்களின் கௌரவமும் பாதிக்கப்பட்டது.
நமது அரசியலமைப்பு சட்ட கோட்பாடுகளை வலுப்படுத்தவும், வளர்ச்சியடைந்த இந்தியா என்ற நமது தொலைநோக்குப் பார்வையை நனவாக்க ஒன்றுபட்டு பாடுபடவுமான உறுதிப்பாட்டையும் நாம் வலியுறுத்துவோம். நமது வளர்ச்சியின் புதிய உச்சங்களை அடைவோம். ஏழை எளிய மக்களின் கனவுகளை நனவாக்குவோம்.
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டபோது நான் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இளம் பிரச்சாரகராக இருந்தேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கம் எனக்கு ஓர் அனுபவ பாடமாக இருந்தது. நமது ஜனநாயக கட்டமைப்பைப் பாதுகாக்கும் உணர்வை அது வலுப்படுத்தியது. அதே சமயம், பல்வேறு அரசியல் தளங்களில் இருந்தவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன். அவர்களின் அனுபவங்களில் சில புத்தக வடிவில் புளூகிராஃப்ட் டிஜிட்டல் ஃபவுண்டேஷன் தொகுத்திருப்பது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அவசரநிலை எதிர்ப்பு இயக்கத்தில் தாமே ஒரு வீரராக இருந்த எச்.டிதேவகவுடா இதற்கு முன்னுரை எழுதியுள்ளார்.
அவசரநிலை ஆண்டுகளின் போது எனது பயணத்தை ‘அவசரநிலை நாட்குறிப்புகள்’ வரிசைப்படுத்துகிறது. அந்தக் காலத்தில் பல நினைவுகளை அது மீண்டும் கொண்டுவருகிறது. அவசரநிலை காலத்தின் இருண்ட நாட்களை நினைவில் வைத்துள்ளவர்கள் அல்லது தங்கள் குடும்பங்களின் பாதிப்புகளை அறிந்தவர்கள் அந்த அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்ளுமாறு நான் அழைப்பு விடுக்கிறேன். இது 1975 முதல் 1977 வரையிலான அவமானகரமான காலம் பற்றி இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
அமித் ஷா பதிவு: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “அவசர நிலையை அப்போது பிரகடனப்படுத்தியிருக்க வேண்டிய அவசியம் எழவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சியின் ஜனநாயக விரோத மனநிலையின் பிரதிபலிப்புதான் எமர்ஜென்சி. அந்த ஒருவரால்தான் (முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை) எமர்ஜென்சி நாட்டில் அமல்படுத்தப்பட்டது.
அதிகாரத்துக்கு ஆசைப்பட்ட காங்கிரஸ் கட்சி, ஜனநாயகத்துக்கு செய்த துரோகம்தான் இந்த அவசர நிலை பிரகடனம். அதிகாரம் சர்வாதிகாரமாக மாறும்போது, அதை தூக்கி எறியும் அதிகாரம் மக்களுக்கு உண்டு என்பதை இந்த நாள் நமக்குச் சொல்கிறது. அவசரநிலை இந்தியாவின் ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்று. இந்திய மக்கள் இந்த நாளை அரசியலமைப்பு படுகொலை நாளாகக் கருதுகின்றனர்.
இந்த நாளில், இந்திய அரசியலமைப்பு உரிமைகள் மீறப்பட்டன. அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டன. பத்திரிகை சுதந்திரம் முடக்கப்பட்டது. பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக சேவை செய்பவர்கள், மாணவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவசரநிலை பிரகடனத்தின்போது மக்கள் கொதித்தெழுந்தனர். சர்வாதிகாரமிக்க காங்கிரஸ் கட்சிக்கு எதிராக அவர்கள் போராடினர். தலைமையிலிருந்து வெளியேறு என்று கோஷம் எழுப்பினர். எமர்ஜென்சியை எதிர்த்துப் போராடி தியாகம் செய்த அனைத்து ஹீரோக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலிகள்” என்று அமித் ஷா குறிப்பிட்டுள்ளார்.