வாஷிங்டன்: “ஈரானில் ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை. அது தேவையற்ற குழப்பத்தை உருவாக்கும்” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “ஈரானில் ஆட்சி மாற்றத்தை நான் விரும்பவில்லை. அனைத்தும் முடிந்த வரை விரைவாக அமைதியாவதை நான் பார்க்க விரும்புகிறேன். ஆட்சி மாற்றம் என்பது குழப்பத்தை ஏற்படுத்தும். மேலும், இவ்வளவு குழப்பங்களை நாங்கள் பார்க்க விரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
முன்னதாக, தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட ஒரு பதிவில், “ஆட்சி மாற்றம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது அரசியல் ரீதியாக சரியானதாக இருக்காது. ஆனால், தற்போதைய ஈரானிய ஆட்சியால் ஈரானை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற முடியவில்லை என்றால், ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக்கூடாது?” என்று கேள்வி எழுப்பியிருந்தார். இந்தப் பதிவை வெளியிட்ட ஓரிரு தினங்களிலேயே ட்ரம்ப் இப்படி மாற்றி பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர்களிடம் அவர் மேலும் பேசும்போது, “அமைதியை நிலைநாட்ட ஈரான் விரும்புகிறது. அந்நாடு மட்டுமல்ல, இஸ்ரேலும் போர் நிறுத்தத்தை அப்பட்டமாக மீறியிருக்கிறது. இஸ்ரேல் ராணுவத்தின் நடவடிக்கை கடும் அதிருப்தி அளிக்கிறது. இஸ்ரேல் போர் விமானங்கள் அனைத்தும் உடனடியாக தங்களது விமான தளங்களுக்கு திரும்ப வேண்டும். ஈரான் மீது எந்த தாக்குதலும் நடத்தக் கூடாது. ஈரான் மக்களில் யாரும் பாதிக்கப்படக் கூடாது” என்று தெரிவித்தார்.
போர் நிறுத்தம்: அணுகுண்டு தயாரிக்க ஈரான் முயற்சிப்பதாக அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள் குற்றம்சாட்டி வரும் நிலையில், கடந்த 13-ம் தேதி ஈரானின் அணுசக்தி தளங்களை குறிவைத்து இஸ்ரேல் போர் விமானங்கள் திடீர் தாக்குதல் நடத்தின. இதில் 4 அணுசக்தி தளங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 22-ம் தேதி அமெரிக்க போர் விமானங்கள் ஈரானின் போர்டோ, நடான்ஸ், இஸ்பகான் ஆகிய முக்கிய அணுசக்தி தளங்களை குறிவைத்து தாக்கின. இதில் 3 அணுசக்தி தளங்களும் முழுமையாக தகர்க்கப்பட்டன.
இதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் நள்ளிரவு கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள அமெரிக்க விமான படைத் தளத்தை குறிவைத்து ஈரான் ராணுவம் 19 ஏவுகணைகளை வீசியது. அவை நடுவானில் அழிக்கப்பட்டன. இந்த விமான படைத்தளத்தில் 11,000 அமெரிக்க வீரர்களும் 100-க்கும் மேற்பட்ட போர் விமானங்களும் நிலை நிறுத்தப்பட்டு உள்ளன. ஈரான் தாக்குதலில் உயிரிழப்போ, சேதமோ ஏற்படவில்லை. தொடர்ந்து ஈரானும், இஸ்ரேலும் கடுமையான தாக்குதல்களை நடத்தின. ஈரான் தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இஸ்ரேலிய போர் விமானங்கள் 100-க்கும் மேற்பட குண்டுகளை வீசின.
இதற்கு பதிலடியாக இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட நகரங்களை குறிவைத்து ஈரான் 100-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியது. இந்தச் சூழலில் கத்தார் நாடு சமரச முயற்சியில் இறங்கியது. அமெரிக்கா, ஈரான், இஸ்ரேல் நாடுகளின் தலைவர்களுடன், கத்தார் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்பாடு எட்டப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஈரான் – இஸ்ரேல் இடையேயான போர் நிறுத்தம் அமலுக்கு வந்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.