பாங்காக்,
தாய்லாந்து-கம்போடியா இடையே நீண்ட காலமாக எல்லை பிரச்சினை நிலவி வருகிறது. இதற்கிடையே கடந்த மாதம் எல்லை பகுதியில் இரு நாட்டு ராணுவ வீரர்களிடையே மோதல் வெடித்தது. இதில் ஒரு கம்போடிய வீரர் கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளின் உறவில் மேலும் விரிசல் ஏற்பட்டது.
இதனையடுத்து தாய்லாந்தில் இருந்து காய்கறி மற்றும் பழங்கள் இறக்குமதி செய்ய கம்போடியா தடை விதித்தது. அதேபோல் தாய்லாந்து திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை ஒளிபரப்பவும் கம்போடியாவில் தடை விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக கம்போடியா உடனான எல்லையை தாய்லாந்து மூடி உள்ளது. இதில் மாணவர்கள் மற்றும் மருத்துவ சிகிச்சை பெறுபவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டு இருப்பதாக தாய்லாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளது.