ஒரு ரிலாக்ஸ் வேண்டும் என்றாலே பயணம் செய்ய வேண்டும் என்ற ட்ரெண்ட் உருவாகிவிட்டது. வழக்கமான இடத்தை தவிர்த்து மக்கள் கூட்டம் அதிகம் இல்லாத இயற்கை எழில் கொஞ்சும் இடத்திற்கு செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவர்.
சில தனித்துவமான இடங்களை தேடி தேடிச் சென்று பார்ப்பார்கள். இதற்கு சமூக ஊடகங்கள் பேருதவியாக இருந்து வருகின்றன. இந்த நிலையில் ஒரு சிறிய கிராமம் திடீரென்று இணையதளத்தில் வைரலாகி, அந்த கிராமத்தை பார்க்க vlogger-கள் சென்று வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ”கூமாபட்டி” என்ற கிராமம் தான் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

எப்படி இந்த கிராமம் மக்களை ஈர்த்தது என்றால், இந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர் தனது கிராமத்திற்கு வருமாறு சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வந்துள்ளார்.
அந்த வீடியோவின் படி, ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் போக வேண்டாம்.. நம்ம ஊரு கூமாபட்டிக்கு வாங்க.. உங்களுக்கு லவ் ஃபெயிலியரா? 4 குழந்தை பெற்றும் வாழ்க்கை சந்தோஷமா இல்லையா? மன அழுத்தமா? கூமாபட்டிக்கு வாங்க.. இந்த தண்ணில குளிச்சு பாருங்க.. எந்த வியாதியும் வராது. சொர்க்க பூமி இது” என பேசி வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இந்த வீடியோ தான் தற்போது இணையதளத்தில் மீம் மெட்டீரியலாக மாறி உள்ளது.
இந்த குக்கிராமம் ஒரு தனித்தீவு என்றும் அவர் பேசியிருக்கிறார். தற்போது #koomapatti என்ற ஹேஷ்டாக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்னும் சொல்லப்போனால் இந்த வீடியோ வைரலானதை அடுத்து பலரும் இந்த கிராமத்தை நோக்கி செல்கின்றனர். இந்த கிராமமும் தற்போது சுற்றுலா தலமாக மாறி உள்ளது.
கூமாபட்டி எங்கு உள்ளது?
விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு பகுதியில் கூமாபட்டி அமைந்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கிராமத்திற்கு அருகில் பிளவக்கல் அணை உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.