கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்ட தடை: கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோயில் நிதியில் இருந்து வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றை கட்டுவதற்கு தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.

ஆலய வழிபடுவோர் சங்கத் தலைவர் மயிலாப்பூர் டி. ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோயில்களின் உபரி நிதியைக் கொண்டு வணிக வளாகம் கட்டுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளக் கூடாது என உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றமும் அதை உறுதி செய்துள்ளது.

ஆனால், இதை மீறி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்களின் நிதியைக் கொண்டு, திருமண மண்டபங்கள், கலாச்சார மையங்கள், நிர்வாகக் கட்டிடங்களை அறநிலையத் துறை கட்டி வருகிறது. இதுபோன்ற பணிகளை மேற்கொள்ளும் முன் பக்தர்களின் கருத்துகளை கேட்க வேண்டும். மேலும், சம்பந்தப்பட்ட கோயிலின் அறங்காவலர்கள் குழுக் கூட்டத்தைக் கூட்டி, ஆட்சேபனையும் இல்லையென்ற பிறகே கட்டுமானப் பணிகளை தொடங்க வேண்டும்.

ஆனால், தமிழக அரசும், அறநிலையத் துறை அதிகாரிகளும் விதிமுறைகளுக்குப் புறம்பாக, தமிழகம் முழுவதும் தற்போது பல நூறு கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு கோயில்களில் கட்டுமானப் பணிகளை சட்டவிரோதமாக மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், சுசீந்திரம் குமாரசாமி, பழனி தண்டாயுதபாணி சுவாமி, ராமேசுவரம் ராமநாத சுவாமி, பவானி சங்கமேஸ்வரர், ஆனைமலை மாசாணியம்மன், பண்பொழி திருமலைக்குமார சுவாமி, காட்டுமன்னார் கோவில் பேசும்பெருமாள், ஈரோடு பண்ணாரி மாரியம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர், எழும்பூர் சீனிவாசப்பெருமாள், பாடி திருவல்லீஸ்வரர், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார், வீரபாண்டி கவுமாரியம்மன் உள்ளிட்ட கோயில்களின் நிதியில் இருந்து கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள டெண்டர் கோரப்பட்டு, பல இடங்களில் பணிகள் நடைபெற்று வருகின்றன.

எனவே, கோயில் நிதியில் இருந்து எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதி்க்க வேண்டும். மேலும், இது தொடர்பான டெண்டர் அறிவிப்பாணைகளையும் ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் பி.ஜெகந்நாத், நிரஞ்சன் ராஜகோபாலன் ஆஜராகி வாதிட்டனர். அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன், தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் கே. கார்த்திக் ஜெகந்நாத் ஆகியோர் வாதிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “கோயில் நிதியைக்கொண்டு வணிக வளாகம், திருமண மண்டபம் போன்ற கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என ஏற்கெனவே பி.பாஸ்கர் என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை அதிகாரிகள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். இந்த வழக்கில் அறநிலையத் துறை தரப்பில் இரு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர். மேலும், அதுவரை எந்த கட்டுமானப் பணிகளையும் மேற்கொள்ளக் கூடாது, தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்றும் அறநிலையத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.