திருவனந்தபுரம்: “நாட்டில் அறிவிக்கப்படாத அவசர நிலை நிலவுகிறது. தற்போதைய சங்பரிவார் அரசு அரசியலமைப்பையே அழிக்க முயற்சிக்கிறது.” என கேரள முதல்வர் பினராயி விஜயன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பினராயி விஜயனின் பேஸ்புக் பதிவில், “இந்திய ஜனநாயக வரலாற்றில் இருண்ட அத்தியாயமான அவசரநிலை பிரகடனம், அரை நூற்றாண்டுக்கு முன்பு ஜூன் 25, 1975 அன்று நடைமுறைப்படுத்தப்பட்டது. இது திடீரெனவும் எதிர்பாராததாகவும் ஏற்பட்ட பேரழிவு அல்ல. மாறாக, இந்தியாவில் பல ஆண்டுகளாக சர்வாதிகார போக்குகள் மற்றும் சிவில் உரிமைகள் அரிக்கப்பட்டதன் கொடூரமான உச்சக்கட்டமாகும்.
அவசரநிலையின் 50-வது ஆண்டு நிறைவு, தற்போதைய இந்திய அரசியல் சூழ்நிலையின் பயங்கரத்தையும் நமக்கு நினைவூட்டுகிறது. நாடு தற்போது அறிவிக்கப்படாத அவசரநிலையை எதிர்கொள்கிறது. அன்று இந்திரா காந்தி அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்தினார், இன்று சங்பரிவார் அரசாங்கம் அரசியலமைப்பையே ஒழிக்க முயற்சிக்கிறது.
அவசரநிலையை எதிர்கொண்ட எண்ணற்ற ஜனநாயக போராளிகளுக்கு, இது ஒரு வரலாற்றுப் பாடம் மட்டுமல்ல. இது அரசால் ஏற்படுத்தப்பட்ட பயங்கரத்தின் எரியும் நினைவு. அந்த நினைவுகளை இழக்காமல் எதிர்காலப் போராட்டங்களுக்கான ஆற்றலாக அவசரநிலையின் வரலாற்றை நாம் பாதுகாக்க வேண்டும். அதை நாம் அடுத்த தலைமுறைகளுக்குக் கடத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்