புதுடெல்லி: பஞ்சாபில் காலியாகும் மாநிலங்களவை எம்.பி. பதவியை ஏற்க ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால் மறுத்துள்ளார். இதனால், அதன் இடைத்தேர்தல் வேட்பாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதியின் ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி சமீபத்தில் காலமானார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட மாநிலங்களவை எம்.பி. சஞ்சீவ் அரோரா வெற்றி பெற்றுள்ளார். அவர் எம்எல்ஏ பதவியை ஏற்க உள்ள நிலையில் மாநிலங்களவை எம்.பி. பதவி காலியாகிறது. இதனால், அந்த இடத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த இடைத்தேர்தலில் போட்டியிடுமாறு ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கேஜ்ரிவாலை அவரது கட்சியினர் வலியுறுத்துகின்றனர். ஆனால், இந்த வாய்ப்பை ஏற்க அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 2013-ல் டெல்லியில் முதல் முறையாக ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தது முதல் தொடர்ந்து மூன்று முறை முதல்வராக கேஜ்ரிவால் பதவி வகித்தார். சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக ஆட்சியைப் பிடித்தது. அத்துடன் தான் போட்டியிட்ட தொகுதியிலும் தோல்வி அடைந்த கேஜ்ரிவால் இப்போது எந்தப் பதவியிலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து டெல்லியின் முன்னாள் முதல்வரான கேஜ்ரிவால் கூறும்போது, ‘நான் மாநிலங்களவைக்கு எம்.பி.யாக செல்ல விரும்பவில்லை. இப்பதவிக்கு யாரை அனுப்புவது என எங்கள் கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு முடிவு செய்யும்’’ என்றார்.
இதன் பின்னணியில் டெல்லி மாநில அரசியலில் மட்டுமே கவனம் செலுத்த கேஜ்ரிவால் விரும்புவதாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு மாநிலங்களவை எம்.பி.யாகும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், இதற்கு முன் பஞ்சாப்
சார்பிலான மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு அம்மாநில கட்சி பொறுப்பாளராக இருந்த ராகவ் சட்டா நியமிக்கப்பட்டிருந்தார். இப்பதவியை தற்போது மணிஷ் சிசோடியா வகிப்பதால் அவரது பெயரும் எம்.பி. பதவிக்கு பேசப்படுகிறது. முன்னாள் பத்திரிகையாளரான சிசோடியா, டெல்லியின் ஆம் ஆத்மி ஆட்சியில் நடைபெற்ற மதுபான ஊழல் வழக்கில் சிக்கி சிறையில் இருந்தவர்.
இதுதவிர டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் பெயரும் எம்.பி. பதவிக்கு பரிசீலிக்கப்படுகிறது. இவரும் டெல்லி தேர்தலில் தோல்வி அடைந்தார்.