PMK அருள்: காலையில் மாநில பொறுப்பு அளித்த ராமதாஸ்; மாலையில் மாவட்ட பொறுப்பிலிருந்து நீக்கிய அன்புமணி

பாமக-வில் கடந்த சில மாதங்களாகவே நிறுவனர் ராமதாஸுக்கும், தலைவர் அன்புமணிக்கும் அதிகார மோதல் நிலவிக்கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், ஒரு வாரத்துக்கு முன்பு பா.ம.க சேலம் மாநகர மாவட்டச் செயலாளரும், சேலம் மேற்கு தொகுதி எம்.எல்.ஏ-வுமான அருள் மற்றும் பா.ம.க கௌரவத் தலைவரும், எம்.எல்.ஏ-வுமான ஜி.கே.மணி ஆகியோர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அதைத்தொடர்ந்து, ராமதாஸ் அவ்விருவரையும் மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

அருள், PMK எம்.எல்.ஏ
அருள், PMK எம்.எல்.ஏ

மறுபக்கம் கட்சி நிர்வாகிகள் கூட்டமொன்றில், “இருவரும் விரைவில் குணமடைய கூட்டு பிரார்த்தனை செய்வோம்” என அன்புமணி கூறினார்.

இவ்வாறிருக்க, ராமதாஸ் தலைமையில் இன்று (ஜூன் 25) நடைபெற்ற கூட்டத்தில் அருளுக்கு பா.ம.க இணை பொதுச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது.

கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களிடம், “அருள் எப்போதும் என்னுடன்தான் இருப்பார். இமயமலை உயரத்திற்குப் பொறுப்புக் கொடுக்கிறோம்” என்று ராமதாஸ் தெரிவித்தார்.

அதேபோல் அருள், “நான் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறேன். அண்ணன் அன்புமணி நடத்திய கூட்டத்தில் கலந்துகொள்ளக் கூடாது என்ற நோக்கத்தில் நான் மருத்துவமனையில் அனுமதி ஆகவில்லை.” என இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், அருள் கவனித்து வந்த சேலம் மாநகர மாவட்டச் செயலாளர் பதவிக்கு க.சரவணன் என்பவரை அன்புமணி நியமித்திருக்கிறார்.

அன்புமணி அறிக்கை
அன்புமணி அறிக்கை

இது குறித்த அறிக்கையில் அன்புமணி, “பா.ம.க சேலம் மாநகர மாவட்டச் செயலாளராக க.சரவணன் இன்று (ஜூன் 25) முதல் நியமிக்கப்படுகிறார். இவருக்கு சேலம் மேற்கு, வடக்கு, தெற்கு சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்படுகின்றன.” என்று குறிப்பிட்டு கையெழுத்திருக்கிறார்.

காலையில் அருளை மாநில பொறுப்பில் தந்தை நியமித்த நிலையில், மாலையில் அவரின் மாவட்ட செயலாளர் பதவியில் வேறொருவரை மகன் நியமித்திருப்பது பா.ம.க உள்கட்சி அரசியலை மேலும் பரபரப்பாக்கியிருக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.