தமிழ்நாட்டில் மதத்துக்கு அல்ல, பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு

திருப்பத்தூர்: “தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜகவினர் பேசுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து. மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூன் 26) திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் நடைபெற்ற அரசு விழாவில், முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: “நான் கோட்டையிலிருந்து மட்டும் பணிகளைச் செய்யவில்லை. தொடர்ந்து மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன்.

குறைந்தது ஒரு மாதத்துக்கு மூன்று மாவட்டங்களுக்குச் செல்கிறேன். இந்த மாதத்தில் மட்டும் சேலம், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அடுத்து, இப்போது திருப்பத்தூருக்கு வந்திருக்கிறேன். இன்றைக்கு காலையில் கூட திருப்பத்தூருக்கு என்னென்ன தேவைகள் என்று கேட்டேன், கேட்டுவிட்டு, அறிவிப்பு செய்யாமல் இருக்க முடியுமா? அதனால் தான் இந்த மாவட்டத்துக்கான ஐந்து அறிவிப்புகளை வெளியிடுகிறேன்.

  • ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கக்கூடிய நெக்னாமலை பகுதியில் வாழும் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவும், பொதுமக்கள் மருத்துவ வசதிகளை பெறவும், வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்யவும் 30 கோடி ரூபாய் செலவில், ஏழு கிலோமீட்டர் நீளமுள்ள சாலை அமைக்கப்படும்.
  • குமாரமங்கலம் பகுதி மக்களுக்கு சீரான மின் விநியோகத்தை உறுதிசெய்கின்ற வகையில், அந்தப் பகுதியில் ஆறு கோடி ரூபாய் செலவில் புதிய துணை மின்நிலையம் அமைக்கப்படும்.
  • நல்லகுண்டா பகுதியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள தோல் அல்லாத காலணி உற்பத்தி பூங்காவை ஒட்டி, 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கும் வகையில், 250 ஏக்கர் பரப்பளவில், 200 கோடி ரூபாய் செலவில் புதிய சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்படும்.
  • திருப்பத்தூர் நகரத்தின் மையப்பகுதியில், பழைய பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில், 18 கோடி ரூபாய் செலவில், அடுக்குமாடி வணிக வளாகம் அமைக்கப்படும்.
  • ஆம்பூர் நகர மக்கள் பயன்பெறும் வகையில், ஒரு கோடி ரூபாய் செலவில், புதிய நூலகக் கட்டடம் கட்டப்படும்.

நாம் அறிவிப்புகள் மட்டும் செய்வதில்லை. அவற்றை விரைந்து செயல்படுத்தி, அதையும் தொடர்ந்து ஆய்வு செய்துகொண்டு இருக்கிறோம். நேற்று, நான் திருப்பத்தூர் வரும் வழியில், பூதூர் ஊராட்சியில் இருக்கும் கலைஞர் கனவு இல்லத்துக்கு சென்று பார்வையிட்டேன். அங்கு குடியிருந்த ஒரு தாய் அவருடைய வீட்டுக்குச் சென்று நான் சந்தித்தேன். அவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர்கள் மகிழ்ச்சிதான் என்னுடைய மகிழ்ச்சியும்.

மறைந்த முதல்வர் கருணாநிதியின் முக்கியமான கனவுகளில் ஒன்று “குடிசையில்லா தமிழ்நாடு” அந்தக் கனவை நனவாக்கும் வகையில், அவரது பெயரிலான கனவு இல்லம் திட்டத்தில் வரும் 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 6 ஆண்டுகளில், எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகளை கட்டித் தரப் போகிறோம். ஒரு வீட்டுக்கு மூன்றரை லட்சம் ரூபாய் தருகிறோம்.

கடந்த இரண்டு ஆண்டில் மட்டும் இரண்டு லட்சம் வீடுகள் கட்டுவதற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தோம். அதில், 90 ஆயிரம் வீடுகள் கட்டி முடித்துவிட்டோம். மீதமுள்ள வீடுகள் பணியும் விரைந்து நடைபெற்றுகொண்டு வருகிறது. இதை நான் தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறேன், கேட்டுகொண்டே இருப்பேன்.

இதேபோல், மத்திய அரசு வீடு கட்டும் திட்டமும் இருக்கிறது. அது ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள். யாருடைய பெயரில்? பிரதம மந்திரி ஊரக குடியிருப்புத் திட்டம் என்று அதற்கு பெயர். ஒரு வீடு கட்டுவதற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் என்று நிர்ணயித்திருக்கிறார்கள். இதில், 60 விழுக்காடு நிதியை மத்திய அரசும், 40 விழுக்காடு நிதியை மாநில அரசும் தர வேண்டும். ஒரு லட்சத்து இருபது ஆயிரத்தில் வீடுகட்ட முடியுமா? அதிலும் 60 சதவீதம் அதாவது, 72 ஆயிரம் ரூபாய் தான் மத்திய அரசு தருகிறது. மீதி கூடுதலாக, நம்முடைய மாநில அரசு, ஒரு லட்சத்து 62 ஆயிரம் ரூபாயை வழங்கி வீடு கட்டி தருகிறோம்.பெயர்தான் அவர்களுடையது. நிதி நம்முடையது. இப்படிதான், தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியை ஒழுங்காக தருவது இல்லை, தந்தாலும் அரைகுறைதான்.

இந்த நிலையில் மத்தியில் இருக்கின்றவர்களின் எண்ணம் எப்படி இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களை மதத்தால், சாதியால் பிளவுபடுத்த தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அவர்களால் முடியாதபோது, இங்கு இருக்கக்கூடிய அதிமுகவையும் சேர்த்துக்கொள்கிறார்கள். நாம் கேட்பது, நாட்டில் வளர்ச்சி சரிகிறது, மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது, வேலைவாய்ப்பு இல்லை என்று சொன்னால், பாஜகவும், அதிமுகவும் மக்களைப்பற்றி கவலைப்படாமல், மதத்துக்காக கவலைப்படுகிறார்கள். இதுதான் அவர்களுடைய அரசியல்.

தமிழ்நாட்டில் மதத்துக்கு ஆபத்து என்று அதிமுகவை வைத்துக்கொண்டு, பாஜகவினர் பேசுகிறார்கள். உண்மையில், தமிழ்நாட்டில் பாஜக கூட்டணிக்கு தான் ஆபத்து. மிஸ்டு கால் கொடுத்தும் கட்சியை வளர்க்க முடியாமல் போனவர்கள், தங்களின் அரசியல் லாபத்துக்கு கடவுள் பெயரை ‘மிஸ்-யூஸ்’ செய்து கொண்டிருக்கிறார்கள். இவர்களின் போலி பக்தியை, அரசியல் நாடகத்தை இங்கு யாரும் ஏற்க மாட்டார்கள். இது தமிழ்நாடு, தந்தை பெரியார் உருவாக்கிய மண், அண்ணா வளர்த்த மண், கருணாநிதி இதை மீட்ட மண், தமிழ்நாடு அனைத்து மதத்தினரும் தங்கள் உரிமையோடும் பிற மதத்தினரோடு நல்லிணக்கத்தோடும் வாழுகின்ற மண் இது.

கடந்த 4 ஆண்டு காலத்தில், தமிழ்நாட்டு வரலாறு காணாத அளவுக்கு 3 ஆயிரம் கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி இருக்கிறோம். அதேபோல், 84 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேவாலயங்களை மசூதிகளை புனரமைக்க நிதி ஒதுக்கியிருக்கிறோம். இதுதான் நம்முடைய திராவிட மாடல். இதை எல்லாம் பார்த்துதான் மதவாத அரசியல் செய்கின்றவர்களுக்கு பற்றிக் கொண்டு எரிகிறது.

அவர்களால் தமிழ்நாட்டுக்கு செய்த வளர்ச்சியைப்பற்றி பேச முடியவில்லை, ஓட்டு கேட்க முடியவில்லை, முடியாது. செய்திருந்தால்தான், சொல்ல முடியும். அதனால் தான், இப்போது மதத்தை வைத்து அரசியல் செய்யலாம் என்று பார்த்தால், அங்கும் திமுக ஸ்கோர் செய்துவிட்டார்களே என்று கதறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஏதாவது குழப்பத்தை ஏற்படுத்த படாத பாடுபடுகிறார்கள். அவர்களுக்கு நான் சொல்லி கொள்வது, இந்த மண், தந்தை பெரியார் பண்படுத்திய மண். பேரறிஞர் அண்ணாவால் மேன்மைப்படுத்தபட்ட மண். மறைந்த முதல்வர் கருணாநிதியால் வளர்க்கப்பட்ட மண். இப்படிப்பட்ட தலைவர்களை நீங்கள் கொச்சைப்படுத்தி வீடியோ போடுகிறீர்கள். அதை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது, அண்ணா பெயரில் கட்சி நடத்தும் கூட்டம்.

அண்ணா பெயரையே, அவர்கள் அடமானம் வைத்துவிட்டார்கள். இன்றைக்கு, கட்சியை அடமானம் வைத்திருப்பவர்கள், நாளைக்கு, தமிழ்நாட்டை அடமானம் வைக்க நாம் அனுமதிக்கக்கூடாது. தமிழ்நாடும், தன்மானமுள்ள தமிழ்நாட்டு மக்களும் இந்த மண்ணுக்கு எதிராக பின்னப்படும் சதிவலைகளின் நோக்கத்தை புரிந்து, தமிழினத்துக்கு எதிரானவர்களுக்கும் எதிரிகளுக்கு துணை போகும் துரோகிகளுக்கும் ஒருசேர பாடம் புகட்ட வேண்டும்,” என்று முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.