தேர்தலில் போட்டியிடாத 345 அரசியல் கட்சிகள் நீக்கம்: தேர்தல் ஆணையம் நடவடிக்கை

புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு அங்கீரிக்கப்படாமல் இருக்கும் 345 அரசியல் கட்சிகளை நீக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்திய தேர்தல் ஆணையத்தில் தற்போது பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாமல் 2,800-க்கும் அதிகமான அரசியல் கட்சிகள் உள்ளன. இவற்றில் பல கட்சிகள் இந்த நிலையை தொடர்வதற்கு தேவையான நிபந்தனைகளை இதுவரை பூர்த்தி செய்யவில்லை. இது தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு வந்திருந்தது.

இதையடுத்து, இத்தகைய அரசியல் கட்சிகளை அடையாளம் காண நாடு முழுவதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் இதுவரை 345 அரசியல் கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்த இந்த கட்சிகள் 2019-ம் ஆண்டிலிருந்து கடந்த 6 ஆண்டுகளில் ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை. அத்துடன் இந்த கட்சிகளுக்கு எங்கே யும் அலுவலகங்களும் இல்லை.

இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையின் கீழ் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோர் இந்த 345 அரசியல் கட்சிகளையும் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர்.

இதன்படி, சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகள் இந்த கட்சிகளிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட தலைமை தேர்தல் அதிகாரிகள் மூலம் விசாரணை நடத்தவும் வாய்ப்பு அளிக்கப்படும். அதன் பின்னர் தேர்தல் ஆணையத்தால் இறுதி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.