முகநூல் பழக்கம்… மீண்டும், மீண்டும் உல்லாசத்துக்கு அழைத்த பெண்… அடுத்து நடந்த கொடூரம்

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் ஹொசகொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் பிரீத்தி (வயது 38). இவருக்கு திருமணமாகி 2 பிள்ளைகளும் உள்ளனர். பிரீத்தி ஹாசனில் உள்ள ஒரு ஆயத்த ஆடை நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். அவரது கணவர் ஆட்டோ டிரைவர் ஆவார்.

அடிக்கடி முகநூல் (பேஸ்புக்) மற்றும் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடக்கும் பிரீத்தி கடந்த 19-ந் தேதி இரவு வழக்கம்போல் முகநூலில் மூழ்கி இருந்தார். அப்போது அவர் மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா கரோடி கிராமத்தைச் சேர்ந்த புனித் (26) என்ற வாலிபர் முகநூலில் ஆன்லைனில் இருப்பதைப் பார்த்தார். உடனே அவருக்கு பிரீத்தி, நண்பர்களாக இணைய விருப்பம் தெரிவித்தார். அதை சற்று நேரத்தில் புனித் ஏற்றார். இதையடுத்து இருவரும் இரவு முழுவதும் சாட்டிங் செய்தனர்.

மறுநாள் காலை அதாவது கடந்த 20-ந் தேதி அன்று காலையில் பிரீத்தியை, புனித் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். பின்னர் கடந்த 21-ந் தேதி நேரில் சந்திக்க பிரீத்தி அழைப்பு விடுத்தார். அதன்பேரில் அவர்கள் இருவரும் கடந்த 22-ந் தேதி ஹாசனில் நேரில் சந்தித்தனர். புனித் தனது நண்பரின் காரை எடுத்துக் கொண்டு ஹாசனுக்கு வந்தார். அதுபோல் பிரீத்தி தனது தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு வந்திருந்தாள்.

இருவரும் நேரில் சந்தித்த பின்னர் தன்னை காரில் எங்காவது தூரமாக அழைத்துச் செல்லுமாறு புனித்திடம், பிரீத்தி கேட்டுள்ளார். அதன்பேரில் புனித், பிரீத்தியை மைசூருவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு இருவரும் சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்த்தனர். பின்னர் அங்கிருந்து மண்டியாவில் கே.ஆர்.எஸ். அணை அருகே உள்ள ஒரு விடுதிக்கு சென்று அறை எடுத்து தங்கினர். அப்போது இருவரும் உல்லாசம் அனுபவித்துள்ளனர். பின்னர் மீண்டும் பிரீத்தி உல்லாசத்துக்கு அழைத்துள்ளார். ஆனால் அதற்கு புனித் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து தன்னை ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிக்கு அழைத்துச் செல்லுமாறு பிரீத்தி கேட்டுள்ளார். இதனைதொடர்ந்து பிரீத்தியை கே.ஆர்.பேட்டை அருகே கத்தரகட்டே வனப்பகுதிக்கு புனித் காரில் அழைத்துச் சென்றார். அங்கு சென்றதும் மீண்டும் புனித்தை, பிரீத்தி உல்லாசத்துக்கு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதற்கு புனித் மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருக்கிறது.

இதில் ஆத்திரம் அடைந்த புனித், பிரீத்தியை சரமாரியாக தாக்கி உள்ளார். மேலும் அங்கு கிடந்த ஒரு கல்லை எடுத்து பிரீத்தியின் தலையில் கடுமையாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் நிலைகுலைந்த பிரீத்தி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். இதையடுத்து புனித் பிரீத்தியின் உடலை காரில் எடுத்துக் கொண்டு அப்பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான விவசாய தோட்டத்திற்கு சென்றார். அங்கு பிரீத்தியின் உடலை வீசிய புனித், அவரது உடலில் இருந்த நகைகளை எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையே பிரீத்தி வீடு திரும்பாததால் பதற்றம் அடைந்த அவரது கணவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் பிரீத்தியின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். அப்போது அந்த அழைப்பை எடுத்து புனித் பேசினார். அவர் பேசும்போது, ‘நான் வாடகை கார் டிரைவர் பேசுகிறேன். பிரீத்தி எனது காரில் பயணிக்கும்போது செல்போனை மறந்து விட்டுச் சென்றுவிட்டார்’ என்று கூறிவிட்டு தலைமறைவாகி இருக்கிறார்.

இதையடுத்து கே.ஆர்.பேட்டை போலீசார் இதுபற்றி வழக்குப்பதிந்து தலைமறைவாக இருந்த புனித்தை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.