மேட்டூர் / தருமபுரி: மேட்டூர் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு விநாடிக்கு 20,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று மாலை 13,332 கனஅடியாக நீர்வரத்து இருந்தது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 18,000 கனஅடியிலிருந்து 20,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணை நீர்மட்டம் நேற்று 112.71 அடியாகவும், நீர் இருப்பு 82.31 டிஎம்சியாகவும் இருந்தது.
அதேபோல், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று மாலை விநாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக நீர்வரத்து உள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துவருகிறது.
இந்நிலையில், அணைகளின் பாதுகாப்பு கருதி அணைகளின் உபரி நீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.