புதுடெல்லி: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ராகுல் காந்தியை சந்திப்பதற்கு முன்பாக, அந்த மாநில வாக்காளர் பட்டியல், தேர்தல் தினத்தன்று பதிவான வீடியோ காட்சிகள் ஆகியவற்றை வழங்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி வந்தார். முறைகேடுகள் ஏதும் நடக்கவில்லை என்று பதில் அளித்து வந்த தேர்தல் ஆணையம், சில தினங்களுக்கு முன்பு ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியது. அதில், நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் தயாராக உள்ளதாகவும், தேதி மற்றும் நேரத்தை தெரிவிக்குமாறும் கோரி இருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்தக் கடிதத்துக்கு பதில் கடிதம் அனுப்பியுள்ள காங்கிரஸ் கட்சி, “இந்தக் கடிதம் அனுப்பப்பட்ட நாளிலிருந்து ஒரு வாரத்துக்குள் மகாராஷ்டிரா வாக்காளர் பட்டியல்கள், மகாராஷ்டிரா, ஹரியானா மாநிலங்களில் தேர்தல் தினத்தன்று எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் ஆகியவற்றை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இது நீண்ட கால கோரிக்கையாகும். தேர்தல் ஆணையம் இதனை எளிதாக நிறைவேற்ற முடியும். இவற்றைப் பெற்றவுடன் காங்கிரஸ் கட்சித் தலைமை தேர்தல் ஆணையத்தைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடையும். அந்தக் கூட்டத்தில், எங்கள் பகுப்பாய்வு முடிவுகளை உங்களுக்கு வழங்குவோம்.” என்று கடிதத்தில் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான சமீபத்திய தேர்தல்களுக்கான ஒருங்கிணைந்த, டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிடுமாறு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார், மேலும், உண்மையைச் சொல்வது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையைப் பாதுகாக்கும் என்றும் அவர் கூறியிருந்தார்.
மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸின் தொகுதியில் வெறும் ஐந்து மாதங்களில் வாக்காளர் பட்டியல் எட்டு சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளதாகவும், அதை “வாக்கு திருட்டு” என்றும் காந்தி கூறினார். “மகாராஷ்டிரா முதல்வரின் தொகுதியில், வாக்காளர் பட்டியல் வெறும் 5 மாதங்களில் 8 சதவீதம் அதிகரித்துள்ளது. சில வாக்குச்சாவடிகளில் 20-50 சதவீதம் அதிகரிப்பு காணப்பட்டது. அடையாளம் தெரியாத நபர்கள் வாக்களித்ததாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். சரிபார்க்கப்பட்ட முகவரி இல்லாத ஆயிரக்கணக்கான வாக்காளர்களை ஊடகங்கள் கண்டுபிடித்தன” என்று ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
“இவை எங்கோ நடந்த ஓரிரு தவறுகள் அல்ல. இது வாக்கு திருட்டு. மூடிமறைக்க முயல்வது என்பது ஒப்புதல் வாக்குமூலம். அதனால்தான் டிஜிட்டல் வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம்,” என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.