சென்னை: மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சேவை புரிந்தவர்களுக்கு வழங்கப்படும் மாநில விருதுகளுக்கு, வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக மாநில அளவில் சிறப்பாக பணிபுரிந்தவர்கள் மற்றும் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்தி தினத்தன்று தேர்ந்தெடுக்கப்படும் விருதாளர்களுக்கு மாநில விருதுகளை முதல்வர் வழங்கி கவுரவித்து வருகிறார். அதன்படி, நடப்பாண்டு சுதந்திர தின விழாவில் மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக பணிபுரிந்தவர்கள், மேலும் சிறப்பாக பணிபுரிய வேண்டும் என்ற ஆர்வத்தை தூண்டும் வகையில் பல்வேறு விருதுகள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளித்த சிறந்த தனியார் நிறுவனம், சிறந்த சமூகப் பணியாளர், அதிக கடன் வழங்கிய மாவட்ட, மத்திய கூட்டுறவு வங்கி ஆகியோருக்கு தலா 10 கிராம் தங்கப் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு, 10 கிராம் தங்கப் பதக்கத்துடன் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட இருக்கிறது.
இவ்விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி உள்ளவர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள படிவத்தில் விவரங்களை பதிவு செய்து, வரும் வரும் 30-ம் தேதிக்குள் விண்ணக்க வேண்டும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்காத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது. அதேபோல், விண்ணப்பத்தின் 2 நகல்கள் 30-ம் தேதி மாலை 5 மணிக்குள் சம்மந்தப்பட்ட வடசென்னை அல்லது தென்சென்னை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.