மதுரை,
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளியான அஜித் என்ற இளைஞர், போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக 6 காவலர்களை மாவட்ட எஸ்.பி. பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார்.
இதனிடையே இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளை அமர்வில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு தொடர்பான விசாரணை இன்று நடைபெற்றபோது, “உயிரிழந்த இளைஞர் என்ன பயங்கரவாதியா? ஆயுதம் ஏந்தி தாக்கினாரா?” என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், ஆயுதம் ஏந்தி தாக்கினால், தற்காப்புக்காக காவல்துறையினர் தாக்குவதை ஏற்கலாம் என தெரிவித்துள்ளனர்.
மேலும், “சாதாரண சந்தேக வழக்கில் விசாரணை எனும் பெயரில் தாக்கியது ஏன் என தெரியவில்லை?” என்று குறிப்பிட்ட நீதிபதிகள், சட்டவிரோத காவல் மரணங்களை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும், கடந்த 4 ஆண்டுகளில், 24 காவல் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.