திருப்புவனம் லாக்கப் டெத் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்குச் சென்ற திருமங்கலத்தைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா, தனது காரிலிருந்து 10 பவுன் நகை காணாமல் போய்விட்டதாகத் திருப்புவனம் காவல் நிலையத்தில் புகாரளித்திருக்கிறார்.
அந்தப் புகாரின்படி, கோயில் காவலாளி அஜித்குமாரை (வயது 27) விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்ற போலீஸார் அவரைக் கடுமையாகத் தாக்கியதில், அஜித்குமார் உயிரிழந்தார்.

இதில் சம்பந்தப்பட்ட போலீஸார் 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கின்றனர்.
அதேசமயம் எதிர்க்கட்சிகள், `ஏன் அந்த போலீஸாரை கைதுசெய்யவில்லை? எஃப்.ஐ.ஆர் ஏன் பதிவுசெய்யவில்லை?’ உள்ளிட்ட கேள்விகளை அடுக்கி, `இதைக் கொலை வழக்காக விசாரிக்க வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில், சட்டம் ஒழுங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் காவல்துறை உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்துகொண்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின், “குற்றங்கள் நடக்காமல் தடுக்கப்பட வேண்டும்! மீறி நடந்தால் அதில் ஈடுபட்டவர் ரவுடியானாலும், அரசியல் பின்புலம் கொண்டவரானாலும், காவலரே ஆனாலும் அதற்கான தண்டனையை விரைவில் பெற்றுத் தந்து நீதி நிலைநாட்டப்படும் ஆட்சியாகத்தான் திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது.
“போதைப் பொருள் – கள்ளச்சாராயம் – பெண்கள் பாதுகாப்பு – லாக்கப் மரணங்கள் போன்றவற்றில் யார் கடமை தவறினாலும் அரசின் நடவடிக்கை மிக மிகக் கடுமையாக இருக்கும்” என்பதைச் சட்டம் – ஒழுங்கு குறித்த இன்றைய ஆய்வுக் கூட்டத்தில் வலியுறுத்தினேன்.” என்று ட்வீட் செய்திருக்கிறார்.