பெங்களூரு,
பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ஸ்கேட்டிங் மைதானம் முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த மாநகராட்சியின் குப்பை லாரியில் ஒரு பெண்ணின் உடல் சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்டு இருந்தது. அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி சி.கே.அச்சுக்கட்டு போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த பெண் உளிமாவு பகுதியைச் சேர்ந்த ஆஷா என்ற புஷ்பா(வயது 39) என்பது தெரியவந்தது. மேலும் அவரது உடல் அடங்கிய சாக்கு மூட்டையை ஒரு நபர் மோட்டார் சைக்கிளில் தூக்கி வந்து குப்பை லாரியில் வீசி சென்றது தெரியவந்தது.
அதையடுத்து சி.கே. அச்சுக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து அந்த நபரை தேடி வந்தனர். இந்த நிலையில் கொலை நடந்த 24 மணி நேரத்தில் ஆஷாவை தீர்த்து கட்டிய அந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
கைதான நபர் அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்சுதீன்(வயது 34) என்று தெரிந்தது. இவர், 2 ஆண்டுக்கு முன்பு அசாமில் இருந்து பெங்களூருவுக்கு வந்து தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்துள்ளார். அதே நிறுவனத்தில் தான் ஆசாவும் தொழிலாளியாக வேலை செய்துள்ளார். இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை செய்ததால் அவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறியது. ஆஷாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். அவரது கணவர் இறந்து விட்டார். குழந்தைகளை உறவினர் வீட்டில் ஆஷா விட்டுள்ளார். அதுபோல் சம்சுதீனுக்கும் திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் அசாமில் வசித்து வருகின்றனர். இதனால் உளிமாவு அருகே கடந்த 1½ ஆண்டாக சம்சுதீன் மற்றும் ஆசா ஒரே வீட்டில் திருமணம் செய்யாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளனர்.
அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் இடையே தங்களை கணவன், மனைவி என இருவரும் கூறி இருந்தனர். இதற்கிடையில், ஆஷா தினமும் வேலைக்கு சென்று விட்டு இரவில் வீட்டுக்கு தாமதமாக வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார். மேலும் அவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அடிக்கடி மது குடித்துவிட்டு இரவில் வீட்டுக்கு தாமதமாக வந்துள்ளார்.
மேலும் சில வாலிபர்களுடன் ஆஷா அடிக்கடி செல்போனில் பேசியபடி வந்துள்ளார். இதுபற்றி சம்சுதீனுக்கு தெரியவந்ததும் ஆசாவை கண்டித்துள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த 28-ந் தேதி இரவும் ஆஷா வீட்டிற்கு தாமதமாக வந்ததால், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சம்சுதீன் ஆஷாவை அடித்து தாக்கியுள்ளார்.
மேலும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை சாக்கு பைக்குள் திணித்து, மூட்டையாக கட்டி மோட்டார் சைக்கிளில் எடுத்துச் சென்று குப்பை லாரியில் சம்சுதீன் வீசியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆஷா அணிந்திருந்த டி-சர்ட்டில் அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர் இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி சம்சுதீனை கைது செய்திருந்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.