அசாமில் நடந்த சோதனையில் 1,000 கிலோ மாட்டிறைச்சி பறிமுதல்: மாநிலம் முழுவதும் 132 பேர் கைது

குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் 1,000 கிலோ மாட்டிறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து அசாம் ஐஜிபி (சட்டம் ஒழுங்கு) அகிலேஷ் குமார்சிங் கூறுகையில், “செவ்வாய்க் கிழமை இரவு மாநிலம் முழுவதும் 112 உணவகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் 1,084 கிலோ மாட்டிறைச்சி கைப்பற்றப்பட்டது.

இதுதொடர்பாக 132 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார். துப்ரி, கோல்பாரா, லக்கிம்பூரில் உள்ள கோயில்களுக்கு அருகில் மாட்டிறைச்சி விற்ற 150-க்கும் மேற்பட்டோர் அண்மையில் கைது செய்யப்பட்டனர். இது அமைதியின்மையை உருவாக்கும் என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும், அசாம் கால்நடை பாதுகாப்பு சட்டத்தை (2021) கடுமையாக அமல்படுத்தப்போவதாக சர்மா கூறியிருந்தார். இந்தச் சட்டம் மாட்டிறைச்சி உண்பதைத் தடை செய்யவில்லை. என்றாலும், இந்து, ஜெயின், சீக்கிய மற்றும் பிற மாட்டிறைச்சி உண்ணாத சமூகங்கள் அதிகம் வசிக்கும் பகுதிகள் அல்லது இந்து மதத்தைச் சேர்ந்த எந்தவொரு கோயில் அல்லது பிற மத நிறுவனங்களின் பகுதியிலிருந்து 5 கி.மீ. சுற்றளவில் மாட்டிறைச்சி மற்றும் மாட்டிறைச்சி பொருட்களை விற்பனை செய்வதைத் தடை செய்யும் ஒரு பிரிவு அதில் உள்ளது. மேலும், தகுதிவாய்ந்த அனுமதிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே மாட்டிறைச்சி அல்லது மாட்டிறைச்சி பொருட்களை விற்பனை செய்ய அந்த சட்டம் அனுமதிக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.