பர்மிங்காம்,
இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2-வது போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 151 ஓவர்களில் 587 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக இந்திய கேப்டன் சுப்மன் கில் 269 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் சோயிப் பஷீர் 3 விக்கெட்டும், ஜோஷ் டாங்கு, கிறிஸ் வோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 89.3 ஓவர்களில் 407 ரன்கள் சேர்த்து ஆல்-அவுட் ஆனது. விக்கெட் கீப்பர் ஜேமி சுமித் 184 ரன்களுடன் இருந்தார். ஹாரி புரூக் 158 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் முகமது சிராஜ் 6 விக்கெட்டும், ஆகாஷ் தீப் 4 விக்கெட்டும் சாய்த்தனர்.
பின்னர் 180 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட்டுக்கு 64 ரன்கள் எடுத்து மொத்தம் 244 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. கே.எல். ராகுல் 28 ரன்களுடனும், கருண் நாயர் 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4-வது நாள் ஆட்டம் நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணியில் கருண் நாயர் 26 ரன்களில் ஆட்டமிழந்தார். தற்போது சுப்மன் கில் – கே.எல். ராகுல் பார்ட்னர்ஷிப் அமைத்து விளையாடி வருகின்றனர்.
இந்த போட்டியில் பும்ரா இல்லாத சூழலில் இந்திய பந்துவீச்சை தலைமை தாங்கிய சிராஜ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனால் சிராஜை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.
அந்த வரிசையில் இந்திய ஜாம்பவான் வீரரான சச்சின் தனது எக்ஸ் பக்கத்தில், “சிராஜிடம் நான் கவனித்த மிகப்பெரிய மாற்றம் என்னவெனில், சரியான இடத்தில் பந்தை வீசுவதில் அவர் காட்டிய துல்லியம் மற்றும் நிலைத்தன்மை ஆகும். அவரது விடாமுயற்சிக்கு 6 விக்கெட்டுகள் கிடைத்துள்ளன. ஆகாஷ் தீப்பும் மிகவும் சிறப்பாக செயல்பட்டார். சபாஷ்!
அழுத்தத்தின் கீழ் புரூக் – சுமித் இடையேயான சிறப்பான பார்ட்னர்ஷிப், எதிர்பார்த்ததை விட இங்கிலாந்தை இந்தியாவின் ஸ்கோருக்கு மிக அருகில் கொண்டு வந்தது” என்று பாராட்டி பதிவிட்டுள்ளார்.