பீகாரில் அதிர்ச்சி; மகனை போன்று பிரபல தொழிலதிபர் 6 ஆண்டுகளுக்கு பின் படுகொலை

பாட்னா,

6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.

பீகாரின் பாட்னா நகரில் பா.ஜ.க.வின் மூத்த தலைவர் மற்றும் பிரபல தொழிலதிபரான கோபால் கெம்கா மர்ம நபர்களால் நேற்றிரவு சுட்டு கொல்லப்பட்டார். பாட்னாவின் காந்தி மைதான் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள டுவின் டவர் சொசைட்டி பகுதியில் அவருடைய வீடு அமைந்துள்ளது.

அவர் ஒரு வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டுக்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார். இதுபற்றி நேற்றிரவு 11 மணியளவில் போலீசாருக்கு தகவல் சென்றது.

இதனை தொடர்ந்து, அந்த பகுதியை தங்களுடைய வளையத்திற்குள் கொண்டு வந்த போலீசார், சி.சி.டி.வி. பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இதனை நகர எஸ்.பி. தீக்சா கூறியுள்ளார். துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். ஒரு துப்பாக்கி குண்டு அந்த பகுதியில் இருந்து கைப்பற்றப்பட்டு உள்ளது என்றும் தீக்சா கூறினார்.

கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, இவருடைய மகன் சுட்டு கொல்லப்பட்ட நிலையில், கெம்காவும் படுகொலை செய்யப்பட்டு உள்ளார். இவருடைய மகனான குஞ்சன் கெம்கா கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பரில் ஹாஜிப்பூர் பகுதியில் தொழிற்சாலைக்கு வெளியே வைத்து, மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.

அப்போது இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில், 6 ஆண்டுகள் கழித்து, கெம்கா சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதற்கான காரணம் என்னவென உடனடியாக தெரிய வரவில்லை. இதுபற்றி தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.