விண்வெளியில் பூமியை 113 முறை சுற்றி வர திட்டம்: ஷுபன்ஷு சுக்லா 50 லட்சம் கி.மீ. பயணம்

புதுடெல்லி: விண்வெளியில் 50 லட்சம் கி.மீ. தூரத்துக்கு இந்திய விண்வெளி வீரரும், கேப்டனுமான ஷுபன்ஷு சுக்லா பயணம் செய்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து டிராகன் விண்கலம் கடந்த மாதம் 25-ம் தேதி பால்கன் 9 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது. இதில் 14 நாட்கள் அறிவியல் பயணத்துக்காக, இந்திய விண்வெளி வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடைந்தனர். அங்கு பயிர்களை விளைவிப்பது உள்ளிட்ட 7 ஆராய்ச்சியில் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஷுபன்ஷு சுக்லா காணொலியில் பிரதமர் மோடியுடன் உரையாடி மகிழ்ந்தார்.

இதனிடையே, ஷுபன்ஷு சுக்லா, பள்ளி மாணவர்கள் மற்றும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன (இஸ்ரோ) விஞ்ஞானிகளுடன் நேற்று மாலை 3.47 மணிக்கு வணிகரீதியான வானொலி தொடர்பு சேவை அளிக்கும் ‘ஹாம் ரேடியோ’ மூலம் பெங்களூருவின் யு.ஆர்.ராவ் செயற்கைக்கோள் மையத்துடன் கலந்துரையாடினார். மேலும் கடந்த 10 நாட்களில் அவர் 50 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தை விண்வெளியில் சுக்லா கடந்துள்ளார்.

மேலும், இந்தப் பயணம் முடியும்போது சுக்லா உள்ளிட்ட விண்வெளி வீரர்கள் பூமியைச் சுற்றி சுமார் 113 சுற்றுப்பாதைப் பயணத்தை நிறைவு செய்திருப்பர்.

இதுகுறித்து மத்திய அறிவியல் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “40 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளிக்குச் சென்ற முதல் இந்தியர் சுக்லா. உயிரியல், பூமி அறிவியல், பொருள் அறிவியல் குறித்த 60க்கும் மேற்பட்ட உலகளாவிய ஆய்வுகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவம் செய்துள்ளார் சுக்லா’’ என்றார்.

இந்தப் பயணத்தில் சுக்லாவுடன், முன்னாள் நாசா விண்வெளி வீரரான பெக்கி விட்சன், போலந்தைச் சேர்ந்த ஸ்லாவோஸ் உஸ்நான்ஸ்கி, ஹங்கேரியின் டிபோர் காப்பு உள்ளிட்டோர் சென்றுள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.