சீனாவின் அணையால் இந்தியாவுக்கு ஆபத்து: அருணாசல பிரதேச முதல் மந்திரி

பெய்ஜிங்,

திபெத் கைலாய மலையில் உற்பத்தியாகும் பிரம்மபுத்திரா நதி, இந்தியா, வங்கதேச நாடுகளில் பாய்ந்து, வங்காள விரிகுடா கடலில் சங்கமம் ஆகிறது. உலகின் மிக நீண்ட நதிகளில், இதுவும் ஒன்று. திபெத்தில் இந்த நதி சாங்போ என்று அழைக்கப்படுகிறது. திபெத் பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் சீனா, பிரம்மபுத்ரா தண்ணீரை, வறட்சியான பகுதிகளுக்கு திருப்பி விடும் திட்டங்களை ஏற்கனவே செயல்படுத்தி வருகிறது.

இந்நிலையில், உலகின் மிகப்பெரிய அணையை பிரம்மபுத்திராவின் குறுக்கே கட்ட சீனா திட்டமிட்டுள்ளது. சீனாவில் யாங்சே நதியின் குறுக்கே த்ரீ கார்கிஸ் (மூன்று பள்ளத்தாக்குகள்) என்ற பிரம்மாண்ட அணை ஏற்கனவே உள்ளது. அதைக் காட்டிலும் மும்மடங்கு பெரிய அணையை பிரம்மபுத்ராவில் கட்ட சீனா திட்டம் உருவாக்கியுள்ளது. இதன் மூலம் உலகின் மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை செயல்படுத்தவும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த அணையைக் கொண்டு, 60 ஆயிரம் மெகாவாட் திறன் மின் உற்பத்தியைச் செய்யலாம் என்பது திட்டம். இந்த மின்நிலையத்திலிருந்து கிடைக்கும் மின்சாரம் மூலம் சீனாவின் ஒட்டுமொத்த மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்ய முடியும். புதிய அணை கட்டுவதன் மூலம், உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் நீர்வளத்தைப் பயன்படுத்தும் வகையில் இருக்கும் என்கின்றனர் இதற்கிடையே,சீனா கட்டும் அணை இந்தியாவுக்கு தண்ணீர் வெடிகுண்டு போன்றது என்று அருணாசல பிரதேச முதல் மந்திரி பெமா காண்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

சீனாவை நம்ப முடியாது. அவர்கள் என்ன செய்வார்கள் என்று யாருக்கும் தெரியாது. சீனா கட்டும் அணையால் நமது பழங்குடியினர் மற்றும் நமது வாழ்வாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். இந்த பிரச்சினை மிகவும் தீவிரமானது. தண்ணீர் வெடிகுண்டாக இந்த அணையை சீனா பயன்படுத்தலாம். இந்த அணை கட்டுமான பணியை சீனா தொடங்கியிருக்கலாம். அல்லது விரைவில் தொடங்கலாம். ஆனால், அவர்கள் இது தொடர்பான எந்த தகவலையும் பகிர மாட்டார்கள். அணை கட்டும் பணி முடிந்தால், நமது சியாங் மற்றும் பிரம்மபுத்திரா நதிகள் வறண்டு போகும்” என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.