பெக்கன்ஹாம்,
இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணி (19 வயதுக்குட்பட்டோர்) இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் (4 நாட்கள்) தொடர் நடைபெறுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஆயுஷ் மாத்ரே பேட்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி முதல் நாள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 450 ரன்கள் அடித்திருந்தது. ஆர்எஸ் ஆம்ப்ரிஷ் 31 ரன்களுடனும், ஹெனில் படேல் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். ஆயுஷ் மாத்ரே 102 ரன்களிலும், அபிக்யான் குண்டு 90 ரன்களிலும், ராகுல் குமார் 85 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இத்தகைய சூழலில் 2-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ஆர்எஸ் ஆம்ப்ரிஷ் நிலைத்து விளையாடினார். ஹெனில் படேல் 38 ரன்களிலும், தீபேஷ் 4 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். நிலைத்து விளையாடிய ஆர்எஸ் ஆம்ப்ரிஷ் 70 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
முடிவில் முதல் இன்னிங்சில் அபார பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்திய அணி 112.5 ஓவர்களில் 540 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் அலெக்ஸ் கிரீன் மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்க உள்ளது.