பாண்டிச்சேரி பிரீமியர் லீக்: ஸ்ரீகரண் அசத்தல் பேட்டிங்.. கடைசிப் பந்தில் மாஹே அணி த்ரில் வெற்றி!

PPL Season 2: ஸ்ரீராம் கேபிட்டல் வழங்கும் பாண்டிச்சேரி பிரிமியர் லீக்கின் 2ஆவது சீசன், சீகெம் மைதானத்தில் கோலாகலமாகத் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற 18ஆவது லீக் போட்டியில், மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணியும், வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த மொஹித் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. ஆரம்பத்தில் இருந்தே மாஹே அணி விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், அந்த அணியின் தொடக்க வீரர் பானு ஆனந்த் சிறப்பாக ஆடி அரைசதம் கடந்தார். மேலும், 46 பந்துகளில் (6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள்) 82 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இந்த சீசனில் அவர் தொடர்ந்து 4 போட்டிகளில் அரைசதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.

சிவமுருகன் மற்றும் ராகவ் கோயல் இருவரும் 27 ரன்கள் எடுத்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடிய சுனில் குமார் 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார். மாஹே அணி தரப்பில் கரண் கண்ணன் மற்றும் சாகர் உதேசி தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

பின்னர் 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மாஹே மெகலோ ஸ்ட்ரைக்கர்ஸ் அணி களமிறங்கியது. முதல் 2 ஓவர்களில் 32 ரன்கள் என தொடக்கத்தில் அதிரடியாக ஆடினர். அதன் பின்னர், சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இதனால், 71 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

ஆனால், அந்த அணியில் ஸ்ரீகரண் நம்பிக்கையுடன் பேட்டிங் செய்தார். கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், சிக்ஸர் எடுத்து அணியை வெற்றிபெறச் செய்தார். இதனால் மாஹே மெகலோ அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

ஸ்ரீகரண் 39 பந்துகளில் (ஒரு பவுண்டரி, 6 சிக்ஸர்கள்) 66 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். ஆட்டநாயகனாகவும் ஸ்ரீகரண் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான முந்தைய போட்டியில் வில்லியனூர் வென்றிருந்த நிலையில், அதற்கு மாஹே பழி தீர்த்தது. வில்லியனூர் அணி இந்த சீசனில் முதல் தோல்வியை சந்தித்தது.

வில்லியனூர் மொஹித் கிங்ஸ் அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 5 போட்டிகளிலும் வென்று முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் மாஹே மெகலோ அணிக்கு 6 போட்டிகளில் விளையாடி 2ஆவது வெற்றியை பெற்று 5ஆவது இடத்தில் உள்ளது.

இது குறித்து பேசிய ஸ்ரீகரண், “கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட்டதால், நானே 6 பந்துகளையும் எதிர்கொள்ள வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தேன். அதைபோலவே போட்டியை வென்று கொடுத்தது மகிழ்ச்சியாக உள்ளது. கடந்த சில போட்டிகளில் நான் சரியாக விளையாடவில்லை. ஆனால், அணியினரும், நிர்வாகத்தினரும் என் மீது நம்பிக்கை வைத்தனர். மீதமுள்ள 5 போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி பிளேஆஃப் சுற்றுக்குள் செல்ல வேண்டும் என்பதுதான் திட்டம்” என்று தெரிவித்தார்.

மேலும் படிங்க: Test: அதிக முறை பேட்டர்களை டக்-அவுட்டாக்கிய டாப் 10 பௌலர்கள்!

மேலும் படிங்க: “வாய் பேச கூடாது களத்தில் திறமைதான் பேச வேண்டும்”.. வாஷிங்டன் சுந்தர் பேச்சு பதிலடி!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.