பாலக்காடு,
கேரளாவின் மலப்புரம், பாலக்காடு ஆகிய மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக நிபா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன்படி பாலக்காடு, மலப்புரத்தில் 3 பேருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்களிடம் தொடர்பில் இருந்த 675 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் பாலக்காடு பகுதியில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை நிபா பாதிப்பால் 57 வயதான நபர் உயிரிழந்த நிலையில், அவரின் மகனுக்கு நிபா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மலப்புரம் பகுதியை சேர்ந்த ஒருவர் நிபா தொற்றால் உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்து உள்ளது. அவருடன் 46 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகின்றது.
தொற்று அதிகரித்து வரும் சூழலில், கட்டுப்பாட்டு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்நிலையில், மன்னார்காடு பகுதியில் உள்ள கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து பாரூக் என்பவர் தப்பி வெளியேற முயன்றுள்ளார். அவர் பைக்கில் தப்ப முயன்றபோது, போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.
எனினும், அவர்களிடம் பாரூக் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இது பின்னர் மோதலாக மாறியது. இதனால், அவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.